கோலாலம்பூர், நவம்பர் 12 :
15வது பொதுத் தேர்தலை முன்னிட்டு போலீசாரின் அனுமதியின்றி இதுவரை 432 தேர்தல் பிரச்ச்சாரங்களை ஏற்பாடு செய்ததை ரோயல் மலேசியன் காவல்துறை (PDRM) கண்டறிந்துள்ளது என்று, உள் பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்கு துறையின் இயக்குனர் புக்கிட் அமான், டத்தோஸ்ரீ ஹசானி கசாலி தெரிவித்தார்.
அனுமதியின்றி தேர்தல் பிரச்சாரங்களை நடத்தும் மாநிலங்களில் சபா மாநிலம் (425) முதலிடத்தில் உள்ளது, அதைத் தொடர்ந்து சிலாங்கூர் (மூன்று), கிளந்தான் (இரண்டு) மற்றும் ஒன்று பெர்லிஸ் மற்றும் பகாங்கில் ஒவ்வொன்றும் என மொத்தம் 432 தேர்தல் பிரச்சாரங்கள் நடந்துள்ளன என்றார்.
இருப்பினும் தேர்தல் பிரச்சாரங்களை நடத்துவதற்கு கெடா (137) , நெகிரி செம்பிலான் (172), பேராக் (155), சிலாங்கூர் (147), பகாங் (131), கிளாந்தான் (98), மலாக்கா(54), சரவாக் (44), பினாங்கு (22), பெர்லிஸ் (21) மற்றும் கோலாலம்பூர் (20) என நேற்றுவரை மொத்தம் 1,037 தேர்தல் பிரச்சாரங்களை நடத்த காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது என்று அவர் மேலும் கூறினார்.
இந்த தேர்தல் பிரச்சாரங்களில் நடந்த “குற்றவியல் அச்சுறுத்தல், அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்களின் கொடிகள் மற்றும் அடையாளங்களை சேதப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு குற்றங்கள் தொடர்பான 14 விசாரணை கோவைகளை நாங்கள் நேற்று திறந்தோம்,” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.