கோலாலம்பூர், நவம்பர் 25 :
P-hailing தேர்வில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கத் தவறியதன் காரணமாக ஏற்பட்ட மன அழுத்தத்தால், நேற்று, சுங்கை வேயில் உள்ள அந்நிறுவனத்தின் அலுவலகத்தில் ஒரு நபர் அரிவாளுடன் வந்து ரகளையில் ஈடுபட்டார்.
பிற்பகல் 3.40 மணியளவில் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில், 37 வயதுடைய அந்த நபர், அரிவாளுடன் வெறித்தனமாகச் சென்று, அந்த அலுவலகத்திலுள்ளவர்களை மிரட்டியதுடன், அங்கிருந்த பொருட்களையும் சேதப்படுத்தினார் என்று பெட்டாலிங் ஜெயா மாவட்ட காவல்துறை தலைவர், துணை ஆணையர் முகமட் ஃபக்ருதீன் அப்துல் ஹமீட் தெரிவித்தார்.
குறித் தசம்பவம் தொடர்பில் புகாரைப் பெற்றதும் போலீசார் உடனே சம்பவ இடத்த்திற்கு சென்று, அவரை கைது செய்தனர் என்று அவர் மேலும் கூறினார்.
அவரது கூற்றுப்படி, சந்தேக நபர் P-hailing ஓட்டுநர் உரிமத்தைப் பெறுவதற்கான தேர்வில் தோல்வியடைந்ததால் கோபமடைந்ததாக நம்பப்படுகிறது. எனினும், இந்த சம்பவத்தில் யாருக்கும் காயங்களோ உயிர் சேதமோ ஏற்படவில்லை என அவர் இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
சம்பவம் இடம்பெற்ற இடத்தில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர், மேலதிக விசாரணைகளுக்காக எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை வரை நான்கு நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் என்று அவர் கூறினார்.