RM600பில்லியன் முறைகேடு செய்த குற்றச்சாட்டின் பேரில், முந்தைய அரசாங்கத்தின் அமைச்சரவையில் இருந்த மூன்று உறுப்பினர்கள் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தால் (MACC) அழைக்கப்படுவார்கள்.
முன்னால் பிரதமர் டான்ஸ்ரீ முஹிடின் யாசின், முன்னால் நிதியமைச்சர் தெங்கு டத்தோஸ்ரீ ஜஃப்ருல் அப்துல் அஜீஸ் மற்றும் முன்னால் சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் ஆகிய மூவரும் விசாரணைக்கு அழைக்கப்படுவார்கள் என்று தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
எம்ஏசிசி தலைமை ஆணையர் டான்ஸ்ரீ ஆசம் பாக்கி செவ்வாயன்று (டிசம்பர் 6) இந்தக் குற்றச்சாட்டுகள் மீதான விசாரணையை ஆணையம் தொடங்கியதாக அறிவித்ததைத் தொடர்ந்து இச்செய்தி வெளியாகி உள்ளது. எவ்வாறாயினும், 3 பேரின் வாக்குமூலங்களை பதிவு செய்ய எப்போது அழைக்கப்படுவார்கள் என்பது தெரியவில்லை.
தெங்கு ஜஃப்ருல் இப்போது சர்வதேச வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சராக உள்ளார். திங்களன்று (டிசம்பர் 5), பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், RM600பில்லியன் செலவில் பல முறைகேடுகள் இருப்பதாகக் கூறியிருந்தார்.
பெரிகாத்தான் நேஷனல் தலைவரான முஹிடின், தான் ஒருபோதும் நிதி மோசடி செய்யவில்லை என்றும், விசாரணைக்கு பயப்படப்போவதில்லை என்றும் கூறினார்.