பினாங்கு, பட்டர்வொர்த்திலுள்ள சுல்தான் அப்துல் ஹலிம் (PSAH) மற்றும் ராஜா துன் உடா (PRTU) இல் உள்ள படகு முனையங்களை மேம்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளவுள்ளதன் காரணமாக, அவற்றை எளிதாக்கும் வகையில், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் துவிச்சக்கர வண்டிகள் போன்ற இரு சக்கர வாகனங்களுக்கான படகுச் சேவை தற்காலிகமாக 2023 ஜனவரி 1ஆம் தேதி முதல் இடை நிறுத்தப்படுகிறது.
இந்த மேம்பாட்டுப் பணிகள் முடிவடைய சுமார் ஏழு மாதங்கள் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று பினாங்கு துறைமுக ஆணையத்தின் (PPC) தலைவர் டத்தோ டான் டீக் செங் கூறினார்.
எவ்வாறாயினும், அந்த காலப்பகுதியில் இரு சக்கர வாகனங்களுக்கான படகு சேவை மாத்திரமே இடைநிறுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
இதற்கிடையில், ஜனவரி 1, 2023 முதல், மாநில அரசும் ரேபிட் பினாங்கும் சம்மிட் புக்கிட் மெர்தாஜாமில் இருந்து பண்டார் பெர்டா வழியாக பினாங்கு தீவுக்கு புதிய இலவச CAT பாலம் ஊடான பேருந்து சேவையை தொடங்கும் என்றும் ஜைரில் கூறினார்.
“மோட்டார் சைக்கிள் ஓட்டுபவர்கள் மற்றும் சைக்கிள் ஓட்டுபவர்களுக்கான (படகு) சேவையின் தற்காலிக இடைநிறுத்தம் தவிர்க்க முடியாதது, இதனால் தினசரி 400 முதல் 500 பயனர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம், அதனால்தான் மாற்று வழியாக அவர்களுக்காக CAT பாலம் ஊடாக பேருந்து சேவை உட்பட பல மாற்றுகளை வழங்கியுள்ளோம் என்று அவர் மேலும் கூறினார்.
“செபராங் ஜெயாவில் இருந்து தீவுக்கு தற்போதுள்ள CAT பாலம் வழியான பேருந்து சேவை வழக்கம் போல் தொடரும் என்றும் அவர் கூறினார்.