நாடு முழுவதும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 52,196 பேர் இன்னும் நிவாரண மையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இருப்பினும் வெள்ளத்தால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட திரெங்கானு மற்றும் கிளாந்தான் ஆகிய மாநிலங்களில் வெள்ள நிலைமை மேம்பட்டுள்ளது.
பேராக்கில், நேற்றிரவு தங்கியிருந்த 12 குடும்பங்களைச் சேர்ந்த 26 பேருடன் ஒப்பிடுகையில், இன்று காலை 15 குடும்பங்களைச் சேர்ந்த 41 பேராக அதிகரித்துள்ளது என்று பேராக் மாநில பேரிடர் மேலாண்மைக் குழு செயலகத்தின் (JPBN) செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
திரெங்கனுவில்,வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நேற்று 33,942 பேராக இருந்து இன்று 27,396 ஆகக் குறைந்தது என்று பேரிடர் மேலாண்மைக் குழு செயலகம் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிளாந்தானில், நேற்று மாலை 8,015 குடும்பங்களில் இருந்து வெளியேற்றப்பட்ட 25,755 பேர் அங்குள்ள 75 நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். அந்த எண்ணிக்கை இன்று 7,709 குடும்பங்களைச் சேர்ந்த 24,690 பேராக குறைவடைந்துள்ளது.
பகாங்க்கில் ஆறு குடும்பங்களைச் சேர்ந்த 23 பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது, அவர்கள் அனைவரும் அங்குள்ள SK சுங்கை உலர் நிவாரண மையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்று பேரிடர் மேலாண்மைக் குழு தெரிவித்தது.
ஜோகூரில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நேற்றிலிருந்து 46 ஆக மாறாமல் உள்ளது. அவர்கள் அனைவரும் சிகாமாட்டில் இயங்கிவரும் 2 நிவாரண மையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.