அன்வாரின் தலைமைத்துவத் திறன்களில் தனக்கு நம்பிக்கை இல்லை என்று முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமது கூறியதை அலட்சியப்படுத்துமாறு பிரதமர் அன்வார் இப்ராஹிமுக்கு அரசியல்வாதிகளும் ஆய்வாளர்களும் அறிவுறுத்தியுள்ளனர். முன்னாள் அம்னோ உச்ச மன்ற உறுப்பினர் நஸ்ரி அஜிஸ், கடந்த பொதுத் தேர்தலில் மகாதீரின் செயல்பாடுகளில் அவரின் கருத்து எதுவும் இல்லை என்றார்.
அவர் லங்காவியில் நின்றபோது தோற்றது மட்டுமல்லாமல், அவர் தலைமையிலான கட்சியின் (பெஜுவாங்) மற்ற உறுப்பினர்களுடன் சேர்ந்து டெபாசிட்டையும் இழந்தார் என்று நஸ்ரி கூறினார். இதன் பொருள் மகாதீர் இனி மக்களின் மனதில் இடம் பெறப்போவது இல்லை. எனவே அன்வாருக்கு நாட்டை வழிநடத்த ஒரு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று அவர் கூறினார்.
1990களில் அன்வார் துணைப் பிரதமராக இருந்தபோது, அன்வாரின் தலைமைத்துவத் தரம் குறித்து தனக்கு சந்தேகம் என்று மகாதீர் கூறியதற்கு நஸ்ரி மறுப்பு தெரிவித்தார். நான் அந்த நேரத்தில் அன்வாருடன் பேசினேன், அவருக்கு உண்மையில் எந்த சக்தியும் இல்லை. மகாதீர் விடுமுறையில் இருந்தாலும் அனைத்தையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். முன்னாள் நிதியமைச்சராக அன்வாரின் அறிவு, தற்போதைய பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை விடுவிக்கும்.
முன்னாள் கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்லஸ் சாண்டியாகோ, அன்வார் மீதான மகாதீரின் எதிர்மறையான கண்ணோட்டம் தவறானது என்றும் அதை கருத்தில் எடுத்துக் கொள்ள வேண்டாம் என்றும் கூறினார். அன்வாரின் உத்திகள் மற்றும் அறிக்கைகள் செயல்திறன் மிக்கவை மற்றும் அவரது முன்னுரிமைகள் சரியானவை என்று அவர் கூறினார். அனைவரும் ஒன்றிணைந்து வெற்றிக்காக அவருடன் அணிதிரள வேண்டும் என்று அவர் கூறினார்.
முன்னாள் பிரதமர்களான முஹிடின் யாசின் மற்றும் இஸ்மாயில் சப்ரி யாகோப் போன்றவர்களை விட அன்வார் “முன்னோக்கி” இருப்பதாக ஆய்வாளர் அஸ்மி ஹாசன் கூறினார். அவர் பிரதம மந்திரியாக நியமிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே, இலக்கு நிர்ணயிக்கப்பட்ட மானியங்களை ஆய்வு செய்து விவாதிக்க, அமைச்சகங்கள் மற்றும் நிறுவனங்களுக்கு அன்வாரின் இரண்டு வார காலக்கெடுவை அவர் மேற்கோள் காட்டினார்.