கோத்தா பாரு:
ஆளில்லா விமானத்தைப் ( dron )பயன்படுத்தி கிளாந்தான், மாஞ்சாங்கில் உள்ள சிறைசாலை மறுவாழ்வு மையத்திற்கு தடை செய்யப்பட்ட பொருட்களை கடத்த முயன்ற குற்றச்சாட்டில், 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த டிசம்பர் 12ஆம் தேதி, அதிகாலை 1.05 மணியளவில் சிறைச்சாலை மறுவாழ்வு மையப் பகுதிக்கு மேலே ஆளில்லா விமானம் பறக்கவிடப்பட்டதாக போலீசாருக்குக் கிடைத்த புகாரின் பேரில், அந்த மூவரும் கைது செய்யப்பட்டதாக கிளாந்தான் மாநில காவல்துறைத் தலைவர், டத்தோ முகமட் ஜாக்கி ஹாருன் தெரிவித்தார்.
“அதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட சோதனையினடிப்படையில்,மாஞ்சாங் சிறைச்சாலைக்கு அருகிலுள்ள ஜாலான் குயிங் இன்டா, கம்போங் பங்கல் மெலரெட் பகுதியில் வைத்து அந்த ஆளில்லாத விமானம் இயக்கப்பட்டதை போலீஸ் கண்டறிந்தது”.
“போலீசாரைக் கண்டதும் மூன்று சந்தேக நபர்களும் ஒரு ஹோண்டா CRV காரில் தப்பி ஓட முயன்றனர் ஆனால் போலீசார் துரிதமாக செயல்பட்டு, அம்மூவரையும் கைது செய்தனர் ” என்று, அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
சந்தேக நபர்களின் காரில் சோதனை செய்ததைத் தொடர்ந்து, ஐந்து கைத் தொலைபேசிகள், இரண்டு யூனிட் பவர் பேங்க், ஒரு கத்தி, 20 பட்டாசுகள் உள்ளிட்ட பொருட்களை போலீசார் கண்டுபிடித்ததாக முகமட் ஜாக்கி கூறினார்.
கைது செய்யப்பட்ட 35 மற்றும் 39 வயதுடைய அனைத்து சந்தேக நபர்களும், கடந்த டிசம்பர் 19 ஆம் தேதி மாஞ்சாங் மாவட்ட நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டனர் என்று அவர் மேலும் கூறினார்.