கோலாலம்பூர்:
சமீப காலமாக சீனாவில் தினசரி கோவிட்-19 தொற்றுநோய் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது, இதனை கருத்தில் கொண்டு அவை குறையும் வரை, சீனாவிலிருந்து சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்குள் நுழைவதை தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு மலேசிய சுற்றுலா ஏஜென்சி சங்கம் (MATA) அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.
சீனாவில் கோவிட்-19 தொற்றுநோய் சம்பவங்களின் எண்ணிக்கையில் சடுதியான அதிகரிப்பு, வைரஸின் புதிய வகைகள் வெளிப்படுவதற்கான சாத்தியக்கூறுகளை அதிகரித்துள்ளது, இதனால் மலேசியர்களுக்கு, குறிப்பாக சுற்றுலாத் துறையினருக்கு மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது என்று MATA-வின் தலைவர் டத்தோ டாக்டர் முகமட் காலிட் ஹருன் தெரிவித்தார்.
“சீனா முழுவதும் உள்ள மருத்துவமனைகள் தங்கள் கடுமையான விதிமுறைகளைத் திரும்பப் பெறுவதற்கான பெய்ஜிங்கின் முடிவைத் தொடர்ந்து, கோவிட் -19 தொற்று நோய் சம்பவங்கள் தீவிரமாக பரவுவதை நாங்கள் அனைவரும் அறியமுடிகிறது.
“கோவிட் -19 மீண்டும் வேகமாக பரவுவதால் சுற்றுலாத் துறையினரான நாம் மீண்டும் அதிர்ச்சியடைந்துள்ளோம், உண்மையில், கோவிட் -19 வைரஸ் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளில் பில்லியன் கணக்கான ரிங்கிட் இழப்புகளை ஏற்படுத்தியதால், பல பயண முகவர் நிலையங்கள் மற்றும் ஹோட்டல்கள் மூடப்பட்டுள்ளன “என்று அவர் நேற்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையின் மூலம் கூறினார்.
எனவே, சுற்றுலாத் துறையின் பங்குதாரர்கள் இன்னும் மீட்சி நிலையில் இருப்பதால், இது மீண்டும் நிகழாது என்று தாம் நம்புவதாக முகமட் காலிட் கூறினார்.
பல வெளிநாடுகள் தங்கள் நாடுகளில் கோவிட் -19 பரவுவதைத் தடுக்க சீனாவிலிருந்து சுற்றுலாப் பயணிகள் அல்லது வணிகர்களின் நுழைவை தற்போதைக்கு கடுமையாக்கியுள்ளன என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.