பாசீர் கூடாங்:
கட்டட நிர்மாணிப்பின்போது, 70 மீட்டர் உயரமான இடத்திலிருந்து தவறி விழுந்து, 42 வயதான நேபாள நாட்டவர் ஒருவர் உயிரிழந்தார்.
ஜோகூர் தொழில்சார் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறையின் (Dosh) கூற்றுப்படி, நேற்று (ஜனவரி 2) காலை 10.21 மணிக்கு, பாதிக்கப்பட்டவர் குறித்த கட்டடத்தில் சாரக்கட்டுக்களை அகற்றிக்கொண்டிருந்த போது, இந்த அசம்பாவிதம் நிகழ்ந்தது.
உயிரிழந்த ஆடவர் 70 மீட்டர் உயரத்தில் இருந்து விழுந்ததன் காரணமாக, பலத்த காயம் அடைந்ததாகவும், அதன்காரணமாக பின்னர் அவர் உயிரிழந்துவிட்டதாகவும் மருத்துவ குழுவினர் தெரிவித்தனர்.
“விபத்துக்கான காரணத்தை ஆராய்ந்து, கண்டறியும் வகையில், உடனடியாக வேலை நிறுத்த ஆணையையும், பணியிடத் தடை அறிவிப்பையும் முதலாளிக்கு வழங்கியுள்ளோம்” என்று, ஜோகூர் தொழில்சார் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்துறை இன்று செவ்வாய்க்கிழமை (ஜனவரி 3) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இதற்குப் பொறுப்பானவர்கள் 1994 இன் தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதாரச் சட்டத்தின் கீழ் சட்ட நடவடிக்கையை எதிர்கொள்வார்கள் என்றும், பணியிட விபத்துக்கள் குறித்து முதலாளிகள் உடனடியாக தொழில்சார் பாதுகாப்பு மற்றும் சுகாதார துறைக்கு தெரியப்படுத்தவும் வேண்டும் என்றும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.