இன்று அதிகாலை ஜாலான் குண்டூர் -பீலின் சாலையின் கிலோமீட்டர் 2இல், மோட்டார் சைக்கிள்கள் விபத்தில் சிக்கியதில் மாரா தொழில்நுட்ப பல்கலைக்கழக (UiTM) மாணவர்கள் இருவர் உயிரிழந்ததாக, ரெம்பாவ் மாவட்ட காவல்துறைத் தலைவர், துணை ஆணையர் ஹஸ்ரி முகமட் கூறினார்.
சம்பவ இடத்திற்கு வந்த துணை மருத்துவர்களால் முஹமட் ஆடிப் ரோஸ்சைடி, 21 மற்றும் முஹமட் அய்மன் ரோஸ்லி 21 ஆகியோர் இறந்தது உறுதிச் செய்யப்பட்டது.
மோட்டார் சைக்கிள் ஒன்றின் பின்னால் அமர்ந்திருந்த முஹமட் ஃபைஸ் இல்ஹாம் அப்துல் ஜலால் 21, என்கின்ற மாணவர் படுகாயமடைந்து, சிரம்பானில் உள்ள துவாங்கு ஜாபர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் ரெம்பாவ் UiTM இன் மாணவர்கள், குண்டூரிலிருந்து பீலின் நோக்கிச் சென்ற முஹமட் ஆடிப் என்பவர் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள், கட்டுப்பாட்டை இழந்து,அங்கிருந்த TM மின்கம்பத்தில் மோதியதில், மின்கம்பம் பின்னால் வந்த மற்றைய மோட்டார் சைக்கிளின் மேல் விழுந்தது என்று, முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக அவர் இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
உயிரிழந்த இருவரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக ரெம்பாவ் மருத்துவமனை தடயவியல் பிரிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், சாலை போக்குவரத்து சட்டம் 1987ன் பிரிவு 41(1)ன் கீழ் வழக்கு விசாரிக்கப்படுகிறது என்றும் ஹஸ்ரி கூறினார்.