கடந்தாண்டு சட்டவிரோத பொருட்கள் கடத்தலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில், Op Kontraban சிறப்பு நடவடிக்கை மூலம் மொத்தம் 306 பேரை உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்கு துறை (JKDNKA) கைது செய்ததாக, தேசிய காவல்துறை செயலாளர், டத்தோ நூர்சியா முகமட் சாதுடின் கூறினார்.
சிறப்பு புலனாய்வு மற்றும் விசாரணை பிரிவு (CPSK) மூலம் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையில், RM132.7 மில்லியன் மதிப்புமிக்க பல்வேறு பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டது.
சுங்கச் சட்டம் 1967 இன் கீழ், மானியத்துடன் கூடிய கட்டுப்படுத்தப்பட்ட பொருட்களின் சட்டவிரோத விநியோகத்தை தடுக்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்றும் அவர் கூறினார்.
மேலும் Op Bersepadu Khazanah என்ற சிறப்பு நடவடிக்கை மூலம் வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின்படி RM2.85 மில்லியன் மதிப்புள்ள கடத்தல் வனவிலங்குகள் மீட்கப்பட்டன. அத்தோடு வெடிபொருட்கள் சம்மந்தப்பட்ட RM7.57 மில்லியன் பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டது.
“மேலும் வழங்கல் சட்டத்தின் கீழ் RM40 மில்லியன் மதிப்புள்ள பொருட்களும், மலேசிய பாமாயில் போர்டு சட்டத்தின் கீழ் RM1.5 மில்லியன் மதிப்புள்ள மானிய விலை எண்ணெய் மற்றும் மலேசிய ஊழல் எதிர்ப்பு ஆணைய சட்டம் 1967 இன் கீழ் RM25,000 மதிப்புள்ள பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன என்று அவர் கூறினார்.
“இவைதவிர RM1.581 மில்லியன் மதிப்புள்ள பிட்காயின், RM12,000 மதிப்புள்ள ஆயுதம் தொடர்பான பொருட்கள், RM7.32 மில்லியன் மதிப்புள்ள சுற்றுச்சூழல் தரம், மருந்துகள் மற்றும் RM3.42 மில்லியன் மதிப்புள்ள அழகுசாதனப் பொருட்கள் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டன” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.