பொருட்களின் விலைக் கட்டுப்பாடுத்துதல் மற்றும் உச்சவரம்பு விலை நிர்ணயம் செய்தல் குறித்து, விரைவில் மறுஆய்வு செய்யப்படும் என்று, உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சர், டத்தோ ஶ்ரீ சலாஹுடின் அயூப் தெரிவித்தார்.
”நாங்கள் கூடிய விரைவில் அதனை மறுஆய்வு செய்வோம். ஏனெனில் ஒரு வருடம் ஆகிவிட்டதால், நாங்கள் அதிகபட்ச விலை நிர்ணயம் குறித்து மறுஆய்வு செய்வோம்,” என்று, இன்று அமைச்சகத்தில் 2023 புத்தாண்டு உரையாற்றிய பின்னர், செய்தியாளரிடம் கூறினார்.
காலாவதியானதாகக் கருதப்படும் பொருட்களின் விலைக் கட்டுப்பாட்டு செயல்முறை, முட்டை, சீனி மற்றும் சமையல் எண்ணெய் போன்ற கட்டுப்படுத்தப்பட்ட பொருட்களின் கையிருப்பில் பற்றாக்குறையை ஏற்படுத்தி இருக்கிறது.
அதனால், அதனை அரசாங்கம் மறுஆய்வு செய்ய வேண்டும் என்று, மலேசிய சில்லறை வணிகர்கள் சங்கத்தின் கூட்டமைப்பு அண்மையில் பரிந்துரைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.