கூலாய் மற்றும் இஸ்கந்தர் புத்திரியில் நடந்த தொடர் சோதனைகளைத் தொடர்ந்து போதைப்பொருள் விநியோகிஸ்தர்கள் என்று நம்பப்படும் ஒரு திருமணமான தம்பதியினர் உட்பட 13 பேரை போலீசார் கைது செய்துள்ளதாக, ஜோகூர் காவல்துறைத் தலைவர், டத்தோ கமாருல் ஜமான் மாமட் தெரிவித்தார்.
கைது செய்யப்பட்டவர்கள் முறையே 33 மற்றும் 29 வயதுடைய கணவன் மற்றும் மனைவியும், மற்றும் 21 முதல் 55 வயதுடைய ஏழு உள்ளூர் ஆண்களும் நான்கு பெண்களும் அடங்குவர்.
ஜோகூர் மாநில குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால், கடந்த ஜனவரி 7ஆம் தேதி மாலை 6 மணி முதல் இன்று அதிகாலை 2 மணிவரை நடத்தப்பட்ட சிறப்பு நடவடிக்கையின் போது, குறித்த சந்தேக நபர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர் என்று கூறினார்.
சோதனையின் போது, மொத்தம் RM362,022 மதிப்புள்ள 74.85 கிலோ கஞ்சா, 1,643 எக்ஸ்டசி மாத்திரைகள், 9.29 கிலோ ஹெரோயின், 171 கிராம் கெட்டமைன் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டதாக அவர் கூறினார்.
மேலும் குறித்த கும்பலிடமிருந்து RM291,000 மதிப்புள்ள ஏழு வாகனங்கள், RM18,300 மதிப்புள்ள மூன்று மோட்டார் சைக்கிள்கள் மற்றும் RM10,650 மதிப்புள்ள நகைகள் ஆகியவற்றையும் நாங்கள் கைப்பற்றினோம்,” என்று அவர் கூறினார்.
தாய்லாந்து உள்ளிட்ட அண்டை நாடுகளில் இருந்து உள்ளூர் மற்றும் அனைத்துலக சந்தைகளுக்கு போதைப்பொருளை விநியோகம் செய்வதாகவும், இந்தக்கும்பல் கடந்தண்டு அக்டோபர் முதல் செயற்பட்டு வருவதாகவும் போலீசார் நம்புகின்றனர்.
சந்தேகநபர்கள் அனைவரும் ஜனவரி 8 ஆம் தேதி தொடங்கி ஏழு நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் என்றும் ஆபத்தான போதைப்பொருள் சட்டம் 1952 இன் பிரிவு 39B இன் கீழ் வழக்கு விசாரிக்கப்படுகிறது என்றும் அவர் மேலும் கூறினார்.