காக்கி புக்கிட்டின் ஃபெல்க்ரா லுபுக் சிரேயில் உள்ள அவரது வீடு தீப்பிடித்ததால், மூதாட்டி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக பாடாங் பெசார் மாவட்ட காவல்துறைத் தலைவர், துணை ஆணையர் முகமட் ஷோக்ரி அப்துல்லா தெரிவித்தார்.
உயிரிழந்தவர் அசிசா பன்ஜாங் கரீம், 61, என்று அடையாளம் காணப்பட்டதாக அவர் கூறினார்.
குறித்த சம்பவம் தொடர்பில் தகவல் கிடைக்கப்பெற்றதும், பாடாங் பெசார் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்திலிருந்து மொத்தம் 12 பேர் சம்பவ இடத்திற்கு சென்றதாகவும், வீட்டினுள் ஒரு பெண்மணி சிக்கியுள்ளதாக கண்டறியப்பட்டதாகவும் அவர் கூறினார்.
“தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டு 10 நிமிடங்களுக்குப் பிறகு முழுமையாக அணைக்கப்பட்டது.
இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “வீட்டில் உள்ள ஒரு அறையில் தீயணைப்பு வீரர்கள் நடத்திய சோதனையில் உயிரிழந்தவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது.
“சம்பவம் நடந்தபோது பாதிக்கப்பட்டவர் வீட்டில் தனியாக வசித்து வந்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.
“சம்பவத்திற்கான காரணம் இன்னும் விசாரணையில் உள்ளது, அத்தோடு குறித்த வீடு 75 விழுக்காடு எரிந்து நாசமானது என்றும் உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக அலோர் ஸ்டாரில் உள்ள சுல்தானா பஹியா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது,” என்றும் அவர் கூறினார்.