புக்கிட் ஜாலீல் நெடுஞ்சாலையில் கடந்த சனிக்கிழமை ஆறு வாகனங்களை மோதிய 40 வயது கார் ஓட்டுநர், போதையில் வாகனம் ஓட்டியதற்காக கைது செய்யப்பட்டார்.
லும்பா கூடா சுற்றுவட்டப்பாதை அருகே காலை 10.30 மணியளவில் நடந்த இந்தச் சம்பவத்தில், சந்தேக நபர் ஓட்டிச் சென்ற Lexus வகை கார் கட்டுப்பாட்டை இழந்து, சாலையின் இடது மற்றும் வலது பாதைகளில் பச்சை நிற வீதி சமிக்ஞைக்காக காத்திருந்த ஆறு வாகனங்களை உரசி, மோதியதாக செராஸ் மாவட்ட காவல்துறை தலைவர், துணை ஆணையர் ஜாம் ஹலீம் ஜமாலுதீன் தெரிவித்தார்.
“இருப்பினும், இந்த விபத்து சம்பந்தப்பட்ட வாகனத்திற்கு மட்டுமே சேதத்தை ஏற்படுத்தியது என்றும், இந்த விபத்தில் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை” என்றும் அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட உள்ளூர்காரரான சந்தேக நபர் கோலாலம்பூர் போக்குவரத்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும், அங்கு மேற்கொண்ட சிறுநீர் பரிசோதனையில், அவர் கஞ்சா வகை போதைப்பொருளை பயன்படுத்தியிருப்பது கண்டறியப்பட்டதாகவும் அவர் மேலும் கூறினார்.
சாலைப் போக்குவரத்துச் சட்டம் 1987 இன் பிரிவு 42 இன் கீழ், சாலைப் பயணிகளுக்கு இடையூறு விளைவிக்கும் அளவுக்கு கவனக்குறைவாகவும், ஆபத்தானதாகவும் வாகனம் ஓட்டியதற்காகவும் விசாரணைக்கு உதவும் விதமாக அவர் தடுத்து வைக்கப்பட்டார், இதில் குற்றம் நிரூபிக்கப்பட்டால், சந்தேக நபருக்கு அதிகபட்சம் ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது RM15,000 அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்” என்று அவர் கூறினார்.