கடத்தப்படும் மியன்மார் நாட்டு சட்டவிரோத குடியேறிகளை இடமாற்றம் செய்வதற்கு, ஆட்கடத்தல் கும்பல்களால் பயன்படுத்தப்பட்ட பேராக்கிலுள்ள ஒரு கடைவீட்டுத் தொகுதியில் குடிநுழைவுத் துறையினர் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையில் 30 மியன்மார் நாட்டு சட்டவிரோத குடியேறிகள் கைது செய்யப்பட்டனர்.
நேற்றிரவு 7.30 முதல் 9.30 வரை நடத்தப்பட்ட நடவடிக்கை மூலம் 18 முதல் 45 வயதுக்குட்பட்ட குறித்த 30 பேரும் கைது செய்யப்பட்டதாக பேராக் குடிநுழைவுத் துறை இயக்குநர் ஹப்ட்சன் ஹுசைனி தெரிவித்தார்.
அவர்களில் கிட்டத்தட்ட பாதி பேர் சரியான பயண ஆவணங்கள் ஏதுமின்றி மலேசியா-தாய்லாந்து எல்லை வழியாக மலேசியாவிற்குள் நுழைந்ததாக ஆய்வு மற்றும் விசாரணை முடிவுகளில் கண்டறியப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்களில் 26 ஆண்களும் 4 பெண்களும் அடங்குவர் என்று அவர் மேலும் கூறினார்.