ஸ்ரீ அமான்-எங்கெலிலி திசையில், பான் போர்னியோ நெடுஞ்சாலையில், நேற்று, இரண்டு கார்கள் மோதிய விபத்தில், இரு உடன்பிறந்தவர்கள் உட்பட மூவர் உயிரிழந்தனர், அத்தோடு நால்வர் படுகாயமடைந்தனர்.
இவ்விபத்தில் பாதிக்கப்பட்ட பாலின் சிம்பா ஜுவா, 34, என்பவர் சம்பவ இடத்திலேயே இறந்தது உறுதிசெய்யப்பட்டது, அவரது சகோதரி எலிசபெத் ஜுவா, 33, எங்கெலிலி ஹெல்த் கிளினிக்கில் சிகிச்சை பெற்று வந்தபோது உயிரிழந்தார்.
இதற்கிடையில், அவர்கள் பயணித்த பெரோடுவா விவாவின் ஓட்டுநர், கார்லோஸ் நெல்சன், 22, சம்பவ இடத்திலேயே இறந்தார், மேலும் அதே காரில் இருந்த மற்றொரு பயணி லிங் உனாங், 38, படு காயமடைந்துள்ளார்.
விபத்தில் சிக்கிய மற்றைய புரோத்தோன் சாகா காரில் பயணித்த இரண்டு ராணுவ வீரர்கள் உட்பட மூன்று பேர் படுகாயமடைந்தனர்.
நேற்று மாலை 6.38 மணிக்கு சம்பவம் தொடர்பாக தங்களுக்கு அழைப்பு வந்தது என்று மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் சரவாக் மாநில செயல்பாட்டு மையத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
ஸ்ரீ அமன் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்திலிருந்து (BBP) இரண்டு EMRS உறுப்பினர்கள் உட்பட ஒன்பது உறுப்பினர்கள் அழைப்பைப் பெற்றவுடன் உடனடியாக இடத்திற்கு விரைந்தனர்.
“இடத்திற்கு வந்தபோது, பெரோடுவா விவா மற்றும் புரோத்தோன் சாகா ஆகிய இரண்டு வாகனங்கள் மோதியதில் ஏழு பேர் பாதிக்கப்பட்டனர். அதில் மூவர் உயிரிழந்தனர் என்றும் காயமடைந்த அனைவரும் ஸ்ரீ அமான் மருத்துவமனையில் மேல் சிகிச்சை பெற்றனர் என்றும், அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.