ஜாலான் கோத்தா திங்கி-குளுவாங்கில் உள்ள ஒரு டுரியான் பழக்கடையிலிருந்து, சுமார் RM2,500 மதிப்புள்ள 80 கிலோகிராம் டுரியான் பழங்களை பணம் செலுத்தாமல் கொண்டோடிய ஆடவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவு 12.30 மணியளவில் கூலாய், தாமான் தேசா பைதூரியில் வைத்து, குறித்த 40 வயது ஆடவர் திருடப்பட்ட டுரியான்களை ஏற்றிச் சென்ற நான்கு சக்கர வாகனத்துடன் கைது செய்யப்பட்டதாக, குளுவாங் மாவட்ட காவல்துறைத் தலைவர், துணை ஆணையர் பஹ்ரின் முகமட் நோ கூறினார்.
“வெள்ளிக்கிழமை மாலை 5.30 மணியளவில் சந்தேக நபர் கடைக்கு வந்ததாகவும், தான் கடையில் உள்ள அனைத்து டுரியான் பழங்களையும் வாங்க விரும்புவதாக கடைக்காரரிடம் கூறியதாகவும் கூறப்படுகிறது.
கடையின் உரிமையாளருடன் விலை குறித்து பேச்சுவார்த்தை நடத்திய பின்னர், டுரியான் வியாபாரி பழங்களை எடைபோட்டு சந்தேக நபர் பயன்படுத்திய பிக்கப் வாகனத்தில் ஏற்றினார், பின் கடைக்காரர் RM2,500 செலுத்துமாறு கூறியபோது, சந்தேக நபர் வாகனத்தில் ஏறி பணம் எதுவும் செலுத்தாமல் சென்றுவிட்டார் என்று, அவர் நேற்று வெளியிட்ட ஒரு அறிக்கையில் கூறினார்.
குறித்த சந்தேகநபருக்கு ஏற்கனவே 10 குற்றப் பதிவுகள் இருப்பதாகவும், அவற்றில் நான்கு குற்றச் செயல்கள் மற்றும் ஆறு போதைப்பொருள் தொடர்பான வழக்குகள் என்று கண்டறியப்பட்டதாகவும் பஹ்ரின் கூறினார்.
“சந்தேக நபர் வரும் புதன்கிழமை வரை நான்கு நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
மேலும் குற்றவியல் சட்டத்தின் 420வது பிரிவின்படி இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது என்றும் அவர் கூறினார்.