நேற்று வெள்ளிக்கிழமை (ஜூன் 30) தும்பாட் அருகே கம்போங் ஹுடான் உலு ஆற்றில், படகில் இருந்து தவறி விழுந்த பெண் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
மாலை 6.45 சம்பவத்தில், உயிரிழந்தவர் நோர் அவதா சுலோங், 30 என அடையாளம் காணப்பட்டதாக தும்பாட் மாவட்ட காவல்துறை தலைவர், துணை ஆணையர் அம்ரான் டோலா கூறினார்.
“பாதிக்கப்பட்டவரின் கணவர், 30 வயதான வான் முகமட் நஜ்மி வான் தைப் மற்றும் அவர்களது 10 வயது மருமகன் அம்ருல்லா ஃபிட்ரி அஃபெண்டி ஆகியோரைக் காணவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
“இந்த சம்பவத்தில் படகில் இருந்த பாதிக்கப்பட்டவரின் 24 மாதங்களேயான பெண் குழந்தை, படகின் திசைமாற்றியில் பிடித்துக்கொண்டிருந்ததில் பொதுமக்களால் காப்பாற்றப்பட்டது,” என்று அவர் மேலும் கூறினார்.
பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் ஆற்றில் படகு சவாரி செய்து கொண்டிருந்தபோது, படகின் இயந்திரம் திடீரென நின்று போனதில், அவர்கள் ஆற்றில் வீசப்பட்டதாக நம்பப்படுவதாக ஏசிபி அம்ரான் தெரிவித்தார்.
உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக தும்பாட் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இதற்கிடையில், வகாஃப் பாரு தீயணைப்பு மற்றும் மீட்பு நிலைய நடவடிக்கைகளின் தளபதி, நசா நாஃபி கூறுகையில், தீயணைப்பு துறையின் நீர் மீட்புக் குழுவினர் நீருக்கடியில் இன்று சனிக்கிழமை (ஜூலை 1) காலை தேடுதல் நடவடிக்கையை மீண்டும் தொடங்கியுள்ளனர் என்று கூறினார்.