மாநில தேர்தல் பிரச்சாரத்தை சீர்குலைக்கும் முயற்சியாக, நேற்று தனது TikTok கணக்கு இடைநிறுத்தப்பட்டதாக கெடா மந்திரி பெசார் டத்தோஸ்ரீ முஹமட் சனுசி முஹமட் நோர் தெரிவித்தார்.
இருப்பினும் சம்பந்தப்பட்டவர்களை அவரது TikTok கணக்கை மீட்டெடுக்குமாறு பெரிகாத்தான் நேஷனலின் தேர்தல் பணிப்பாளர் அழைப்பு விடுத்தார், இதன் மூலம் அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு தீர்வு காண முடியும் என்றார்.
“நான் TikTok இல் பிரபலமடைந்து கொண்டிருந்தேன், ஆனால் எனது கணக்கு வெள்ளிக்கிழமை இரவு இடைநிறுத்தப்பட்டது. அதில் 5.2 மில்லியன் லைக்குகள் உள்ளதுடன், என்னை பின்தொடரும் மில்லியன் கணக்கானவர்களும் இல்லது போய்விட்டனர். TikTok (மலேசியா) எனது கணக்கை மீண்டும் நிறுவ வேண்டும்” என்று நேற்று இரவு பாலிங்கில் நடந்த ஒரு நிகழ்வில் உரையாற்றியபோது அவர் கூறினார்.
மேலும் தனது சில நண்பர்களின் கணக்குகளும் இடைநிறுத்தப்பட்டதாக சனுசி கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் “நாங்கள் டிவி அல்லது ரேடியோவில் பிரச்சாரம் செய்ய முடியாது, எனவே நாங்கள் TikTok மற்றும் Facebook ஐ பயன்படுத்துகிறோம், ஆனால் தற்போது இளைஞர்கள் பேஸ்புக் பயன்படுத்துவதில்லை, இது வயதானவர்களுக்கு என்று அவர்கள் கூறுகிறார்கள். எனவே இளையோரைக் கவர எங்களுக்கு TikTok மிக அவசியம் ” என்று அவர் மேலும் கூறினார்.
ஆகஸ்ட் 12ஆம் தேதி நடைபெறவுள்ள மாநிலத் தேர்தலுக்கு முன்பாக எதிர்க்கட்சிகளின் வாயை அடைக்க ஒற்றுமை அரசாங்கம் இவ்வாறான தந்திரங்களை கையாண்டு வருவதாக அவர் மேலும் கூறினார்.