சென்னை: நிலவின் தென் துருவ பகுதிக்கு இந்தியா விக்ரம் லேண்டரை அனுப்பியதற்கு பின் முக்கியமான சில காரணங்கள் உள்ளன. இந்தியா மட்டுமின்றி உலக நாடுகள் பலவும் நிலவின் தென் துருவத்தின் மீது ஆர்வம் காட்டி வருகின்றன. நிலவின் தென் துருவத்தில் தண்ணீர் ஐஸ் கட்டியாக இருக்கலாம் என்பதால் இங்கே ஆய்வு செய்ய உலக நாடுகள் விரும்புகின்றன.
ஏற்கனவே நிலவில் தண்ணீர் இருப்பதற்கான தடயங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. 1960 களின் தொடக்கத்தில், நிலவில் அப்போலோ தரையிறங்குவதற்கு முன்பு, விஞ்ஞானிகள் நிலவில் தண்ணீர் இருக்கலாம் என்று ஊகித்தனர். ஆனால் 1960 களின் பிற்பகுதியிலும் 1970 களின் முற்பகுதியிலும் அப்போலோ பூமிக்கு கொண்டு வந்து திரும்பிய மாதிரிகள் உலர்ந்ததாக காணப்பட்டது.
இதனால் அதில் தண்ணீர் இல்லை என்று கூறப்பட்டது. இதையடுத்து 2008 ஆம் ஆண்டில், பிரவுன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் புதிய தொழில்நுட்பத்துடன் அந்த மாதிரிகளை மறுபரிசீலனை செய்தனர். அதில் கண்டுபிடிக்கப்பட்ட எரிமலை துகள்களின் உள்ளே இருந்த கண்ணாடி போன்ற துகள்களின் உட்பகுதிக்குள் ஹைட்ரஜனைக் கண்டறிந்தனர். அதாவது தண்ணீருக்கான மூல ஆதாரம் இதில் இருந்தது.
அதன்பின் 2009 ஆம் ஆண்டில், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் சந்திரயான்-1 ஆய்வில் இங்கே இருந்த நீர் கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் இதை இஸ்ரோ வெளியிடாமல், நாசா சொல்ல வேண்டும் என்று காத்திருந்தது. நாசாவின் ஆய்வுக்கருவி இங்கே தண்ணீர் இருப்பதை கண்டுபிடித்தது. இஸ்ரோவின் கண்டுபிடிப்பு இது என்றும் நாசா ஒப்புக்கொண்டது.
நிலவில் நீர்: நிலவின் அடிப்பகுதியில் நீர் இருப்பது இதுவரை உறுதி செய்யப்பட்டு உள்ளது. ஆனால் அங்கிருக்கும் நீரின் அளவு, தன்மை ஆகியவை இன்னும் கண்டறியப்படவில்லை. அங்கே உள்ளே நீரை ஆய்வு செய்வதன் மூலம் பல விஷயங்களை கண்டுபிடிக்க முடியும்.
முக்கியமாக பூமி மீது மோதிய எரிகற்கள் நிலவின் மீதும் மோதி உள்ளன. இதனால் அந்த கற்களின் பண்புகளை அறிந்து கொள்ள முடியும். அதேபோல் அங்கே உள்ள எரிமலையை பற்றி அறிய முடியும். முக்கியமாக நீர் இருந்தால் அங்கே கண்டிப்பாக உயிரினங்களும் உருவாகும் சூழ்நிலை இருக்கும். இப்போது ஊழல் ஐஸ் உருகும் பட்சத்தில் அங்கே கடல் உருவாகும். இதன் மூலம் பேஸ் அமைக்க ஏதுவாக இருக்கும்.
அதேபோல் நீர் இருந்தால் அங்கே பயிர்களும் இருக்கும். அல்லது பயிர்கள் வளர சாதகமான சூழ்நிலை இருக்கும். நீர் இருப்பதால் அங்கே உள்ளே ஹைட்ரஜன், ஆக்சிஜன் சுவாசிக்க சாதகமான சூழ்நிலையை உருவாக்கும். இதனால் நிலவின் தென் துருவத்தில் காணப்படும் நீரை கண்டுபிடிப்பது மிக முக்கியம் ஆகிறது.
நிலவின் தென் பகுதியில் உள்ள குழிகளில் 2 பில்லியன் ஆண்டுகளாக சூரிய ஒளியே படவில்லை. லேசான மேற்பரப்பில் மட்டுமே சூரிய ஒளி படுகிறது. காரணம் நிலவு அச்சு 88.5 டிகிரி செங்குத்தாக உள்ளது. இதனால் சூரியன் நிலவின் தென் பகுதிக்கு ஒளியை அனுப்ப முடிவது இல்லை. இதனால் நிலவின் தென் பகுதி இன்னமும் ரகசியமாகவே உள்ளது.
இங்கே வெப்பநிலை மைனஸ் 230 டிகிரி செல்சியஸ் வரை உள்ளது. இவை எல்லாம் கருப்பான, ஐஸ் படிந்த, ரகசியமான, மர்மம் நிறைந்த மிகப்பெரிய பள்ளங்கள் ஆகும். இங்கே நிறைய ஐஸ் கட்டிகள் உள்ளே இருக்கலாம் என்று கருதப்படுகிறது. அந்த ஐஸ் கட்டிகளில் இருந்து ஒரு சொட்டு தண்ணீர் வெளியே எடுக்கப்பட்டால் கூட அது உலக வரலாற்றிலேயே மிகப்பெரிய கண்டுபிடிப்பாக, சாதனையாக இருக்கும். முக்கியமாக ஒரே ஒரு சொட்டு தண்ணீர் கண்டுபிடிக்கப்பட்டால் கூட அது நிலவில் உயிர் தோற்றங்களை, வாழ்வியலை தொடங்குவதற்கான ஆரம்ப புள்ளியாக இருக்கும்.