இசையமைப்பாளராக இருந்து முன்னணி கதாநாயகனாக உயர்ந்துள்ள விஜய் ஆண்டனி தற்போது சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் ‘ரத்தம்’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இதில் நந்திதா, மகிமா நம்பியார் ஆகியோரும் நடித்துள்ளனர். ரத்தம் படம் திரைக்கு வர உள்ளது. இந்த நிலையில் சென்னையில் நடந்த ரத்தம் பட நிகழ்ச்சியில் விஜய் ஆண்டனி தனது இளைய மகள் லாராவுடன் கலந்து கொண்டார். மேடைக்கு அழைத்துச்சென்று தனது அருகில் உட்கார வைத்துக்கொண்டார். அண்மையில் இவரின் மூத்த மகள் மீரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
சமீபத்தில் விஜய் ஆண்டனியின் மூத்த மகள் மீரா மன அழுத்தம் காரணமாக மரணம் அடைந்த துக்க நிலையிலும் விஜய் ஆண்டனி பட விழாவில் பங்கேற்றதற்கு படக்குழுவினர் நன்றி தெரிவித்தனர். இந்நிகழ்ச்சியில் விஜய் ஆண்டனி பேசும்போது, ரத்தம் கதையை படித்ததும் பிடித்துப்போனது. குற்றங்களை புலனாய்வு செய்யும் நிருபராக நடித்து இருக்கிறேன். யாரும் எதிர்பாராத கோணத்தில் படம் இருக்கும். சமூக விஷயம் மற்றும் அரசியல் விஷயங்களும் படத்தில் உள்ளது. இது ஒரு வெற்றிப்படமாக அமையும் என்றார்.