கோலாலம்பூர்:
பத்துக்கும் குறைவான மாணவர்களை கொண்டிருக்கும் 24 தமிழ்ப் பள்ளிகளை காப்பாற்றவும் இடம் மாற்றம் செய்யவும் கல்வி அமைச்சின் சிறப்பு அதிகாரி எஸ்.தியாகராஜாவுடன் மனிதவள அமைச்சர் வ. சிவகுமார் நேற்று முக்கிய பேச்சுவார்த்தையை நடத்தினார்.
மனிதவள அமைச்சரின் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பு பெரும் பயனாக அமைந்தது.
அண்மையில் தமிழ் ஆர்வலர்கள் கொண்ட குழு அமைச்சர் சிவகுமாரை சந்தித்து 10 க்கும் குறைவான மாணவர்களை கொண்டிருக்கும் 26 தமிழ்ப் பள்ளிகளை உடனடியாக காப்பாற்ற வேண்டும் என்று கோரிக்கையை முன் வைத்தனர்.
முன்பு அதிக அளவில் இந்தியர்கள் தோட்டத்தில் வாழ்ந்தனர் . இப்போது நகர் புறங்களில் குடியேறி விட்டதால் தோட்டப்புற தமிழ்ப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் எண்ணிக்கை மிகப்பெரிய அளவில் குறைந்து விட்டது.
இந்த பள்ளிகளை நகர்ப் புறங்களில் மாற்றுவதற்குரிய ஏற்பாடுகளை கல்வி அமைச்சின் உதவியோடு அமைச்சர் சிவகுமார் மேற்கொண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
கல்வி அமைச்சின் தரவுகளின் படி 24 தமிழ்ப் பள்ளிகள் பத்துக்கும் குறைவான மாணவர்களை கொண்டிருக்கிறது என்று அதன் சிறப்பு அதிகாரி தியாகராஜா தெரிவித்தார்.
இந்நாட்டில் உள்ள அனைத்து மாணவர்களும் முறையான கல்வியை பயில வேண்டும் என்பதில் கல்வி அமைச்சர் பாட்லினா சிடேக் அதிக அக்கறை கொண்டிருப்பதாக தியாகராஜா சுட்டிக் காட்டினார்.
இதனிடையே பகாங் மாநிலத்தில் குவாந்தான் ஜெராம் தோட்டத்தில் கடந்த 11 ஆண்டுகளாக கொள்கலனில் இயங்கி வரும் ஜெராம் தமிழ்ப் பள்ளி நிலவரம் குறித்தும் இந்த சந்திப்பில் பேசப்பட்டது.
மிக விரைவில் இந்த பள்ளிக்கு வருகை புரியவிருப்பதாக அமைச்சர் சிவகுமார் தெரிவித்தார்.