கோலா காங்சார்:
கடந்த மார்ச் மாதம், 14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து, உடல்ரீதியாக பாலியல் வன்கொடுமை செய்ததாக 52 வயது நபர் ஒருவருக்கு எதிராக இன்று அமர்வு நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.
எவ்வாறாயினும், குற்றம் சாட்டப்பட்ட முகமட் காசிம் அப்துல் வஹாப் என்ற சந்தேக நபர், நீதிபதி ரொஹைதா இஷாக் முன் நிலையில் குற்றச்சாட்டுகள் வாசிக்கப்பட்டபோது, தான் குற்றமற்றவர் என்று கூறி, விசாரணை கோரினார்.
குற்றப்பத்திரிகையின்படி, மார்ச் 27 அன்று மதியம் 1 மணியளவில் கேரிக், கம்போங் பெலும் பாரு லாவி, சுங்கை கெனெரிங்கில் குறித்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக அந்த நபர் குற்றம் சாட்டப்பட்டார்.
இந்த குற்றத்திற்காக, அவர் மீது குற்றவியல் சட்டத்தின் 376(1) பிரிவின் கீழ் குற்றம் சாட்டப்பட்டது, இது குற்றம் நிரூபிக்கப்பட்டால் 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் பிரம்படி தண்டனை ஆகியவை விதிக்க வழி செய்கிறது.
மேலும் குற்றம் சாட்டப்பட்ட காசிம், அதே நேரம், தேதி மற்றும் இருப்பிடத்தில் பாதிக்கப்பட்டவருக்கு எதிராக இரண்டு உடல்ரீதியான பாலியல் வன்கொடுமையையும் புரிந்துள்ளார் எனவும் குற்றம் சாட்டப்பட்டது.
இந்தக் குற்றத்திற்காக, அவர் மீது 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் பிரம்படி விதிக்க கூடிய குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் சட்டம் 2017 (சட்டம் 792) பிரிவு 14 (a) மற்றும் பிரிவு 14 (b) ஆகியவற்றின் கீழ் குற்றம் சாட்டப்பட்டது.
இவ்வழக்கில், குற்றம் சாட்டப்பட்டவர் மற்றும் அவரது குடும்பத்தினர் பாதிக்கப்பட்டவரை அணுகி தொந்தரவு செய்யக்கூடாது என்ற கூடுதல் நிபந்தனைகளுடன், குற்றம் சாட்டப்பட்டவருக்கு இரண்டு தனி நபர் உத்தரவாதத்துடன் RM10,000 மதிப்பிலான பிணை வழங்கியது.
வழக்கை மீண்டும் செவிமடுக்க நீதிமன்றம் டிசம்பர் 18 ஆம் தேதியை நிர்ணயித்தது.