கோலாலம்பூர்:
சமூக நல பாதுகாப்பு நிறுவனங்கள் ஆசியான் ஒற்றுமைக்கு மாபெரும் சக்தியாக விளங்குகிறது என்று மனிதவள அமைச்சர் சிவகுமார் தெரிவித்தார்.
மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் ஆசியான் நாடுகளைச் சேர்ந்த சமூக நல பாதுகாப்பு நிறுவனங்கள் மற்றும் ஏஜென்சிகள் மாநாட்டில் கலந்து கொண்டிருக்கும் பேராளர்களுக்கு சொக்சோ நிறுவனத்தின் ஏற்பாட்டில் நேற்று விருந்து உபசரிப்பு நடைபெற்றது.
இந்த மாநாடு ஆசியான் ஒற்றுமையின் சக்திக்கு ஒரு சான்றாக விளங்குவதோடு நிலையான மற்றும் விரிவான சமூக பாதுகாப்பையும் வழங்குகிறது என்று அமைச்சர் சிவகுமார் தமது உரையில் சுட்டிக் காட்டினார்.
உலகில் குறிப்பிடத்தக்க பொருளாதார மையமாக ஆசியான் மாறிவருகிறது. 2022 ஆம் ஆண்டில் ஆசியான் பொருளாதாரம் 3.6 டிரில்லியன் என்ற மொத்த உள்நாட்டு உற்பத்தியை எட்டியுள்ளது.
சமூகப் பாதுகாப்பில் அறிவு, நிபுணத்துவம் மற்றும் சிறந்த நடைமுறைகள் மிகவும் வரவேற்கப்படுகிறது. திறனை வளர்ப்பதில் ஆக்கபூர்வமான ஒத்துழைப்பு அவசியம் என்று அவர் சொன்னார்.
இந்த நிகழ்வில் சொக்சோ நிறுவனத்தின் தலைமை செயல் முறை அதிகாரி டத்தோஸ்ரீ டாக்டர் அஸ்மான் உட்பட பலரும் கலந்து சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.