கோலாலம்பூர்:
கிள்ளான், கம்போங் பெண்டாமாரில் உள்ள வீட்டின் குளியலறையில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் சிமெண்டில் புதைக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்ட விஷயம் தொடர்பில், வெளிநாட்டு ஆடவர் ஒருவரை போலீஸார் கைது செய்துள்ளனர். மேலும் இரண்டு பேரை தேடும் நடவடிக்கை முடுக்கிவிடப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட 53 வயதுடைய நபர் இன்று கிள்ளான் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்று சிலாங்கூர் காவல்துறைத் தலைவர் டத்தோ ஹுசைன் உமர் கான் தெரிவித்தார்.
“இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் ரஞ்சித் சிங் மற்றும் மன்தீப் சிங் என அடையாளம் காணப்பட்ட வெளிநாட்டினரை போலீசார் தேடி வருகினறனர் என்று, நேற்றிரவு அவர் வெளியிட்ட ஓர் அறிக்கையில் சொன்னார்.
இரண்டு நாட்களுக்கு முன்பு, இரவு 10.58 மணியளவில் வீட்டின் குளியலறையில் சடலம் கண்டெடுக்கப்பட்டது குறித்து உள்ளூர் ஆடவரிடமிருந்து போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
போலீஸ் விசாரணையின் அடிப்படையில், புகார்தாரர் ஆகஸ்ட் 2019 முதல் அக்டோபர் 2021 வரை இரண்டு ஆண்டுகளுக்கு கம்போங் பெண்டாமரில் உள்ள தனது வீட்டை இரண்டு வெளிநாட்டு ஆண்களுக்கு வாடகைக்கு விட்டிருப்பது கண்டறியப்பட்டது.
பின்னர் குறித்த வீட்டை மறறொருவருக்கு வாடகைக்கு விடுவதற்கு முன், வீட்டை ஆய்வு செய்தபோது, குளியலறையின் சுவரின் ஒரு பகுதி சிமெண்ட் பூசப்பட்டிருப்பதைக் கண்டதாகவும், இது தொடர்பாக குறித்த 2 ஆடவர்களிடமும் அவர் கேட்டபோது, சுவரில் நீர் கசிவதால், சிமெண்ட் போட்டு மூடி வைத்ததாக கூறினார்.
இதில் எந்த் சந்தேகமும் வராததால், அவ்வீட்டை வேறொருவருக்கு வாடகைக்கு கொடுத்தார்.
கடந்த மாதம் வீட்டின் மேற்கூரையை பழுது பார்க்கும் வெளியூர் தொழிலாளி ஒருவர் இது குறித்து கூறிய போதே இந்த சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
“இந்த வழக்கு குற்றவியல் சட்டம் 302 பிரிவின் கீழ் விசாரிக்கப்படுகிறது,” என்று அவர் மேலும் கூறினார்.