நியூயார்க்:
கத்தாரில் நடந்த 2022 உலகக் கிண்ணக் காற்பந்து போட்டியில் லயனல் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி வாகை சூடியது.
போட்டியின்போது மெஸ்ஸி அணிந்திருந்த அர்ஜெண்டினா அணியின் 6 சட்டைகள் நியூயார்க்கில் நேற்று வியாழக்கிழமை ஏலத்திற்கு விடப்பட்டன.
அந்த 6 சட்டைகளும் 7.8 மில்லியன் அமெரிக்க டாலருக்கு விலைபோனதாக ஏல நிறுவனமான Sotheby’s தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டில் விளையாட்டு வீரருக்கு தொடர்புடைய ஒரு பொருள் இவ்வளவு பெரிய தொகைக்கு விலைபோனது இதுவே முதல்முறை என்றும் சோத்பி’ஸ் குறிப்பிட்டது.
ஏலம் போன 6 சட்டைகளில் ஒன்று பிரான்சுக்கு எதிரான இறுதியாட்டத்தில் மெஸ்ஸி அணிந்திருந்த சட்டைகளில் ஒன்று என்றும் தெரிவிக்கப்பட்டது.
கடந்த ஆண்டு, கூடைப்பந்து ஜாம்பவான் மைக்கல் ஜோர்டன், 1998 ஆம் ஆண்டு நடந்த ‘என்பிஏ’ போட்டியின் இறுதியாட்டத்தில் அணிந்திருந்த சட்டை 10.1 மில்லியன் டாலருக்கு ஏலம்போனது குறிப்பிடத்தக்கது.