சுங்கை பட்டாணி:
பெக்கான் லாமா சுங்கை பட்டாணியில் உள்ள ஜாலான் கோலா கெட்டில் என்ற இடத்தில் நள்ளிரவு ஏற்பட்ட தீப்பரவலில் ஆறு கடைகள் சேதமடைந்தன.
அவற்றில் மூன்று கடைகள் 90 விழுக்காடு எரிந்துள்ள நிலையில், மற்றய மூன்று கடைகள் சுமார் 5 விழுக்காடு சேதமடைந்தன என்று சுங்கை பட்டாணி தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத் தலைவர் துணை தீயணைப்பு கண்காணிப்பாளர் இஸ்மாயில் முகமட் ஜைன் கூறினார்.
நள்ளிரவு 12.47 மணிக்கு தீ விபத்து குறித்து தீயணைப்பு நிலையத்திற்கு ஒரு அழைப்பு வந்ததாகவும், சம்பவ இடத்திற்கு 14 தீயணைப்பு வீரர்கள் கொண்ட குழு உடனே விரைந்ததாகவும், இந்த சம்பவத்தில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்றும் அவர் இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.