கோலாலம்பூர்:
நேற்று (ஜனவரி 3) சுமார் 103 உயிர்களை பலி கொண்ட இரட்டைக் குண்டுவெடிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து, ஈரானுக்கும் அதன் மக்களுக்கும் மலேசியா தனது இரங்கலைத் தெரிவித்துள்ளது.
குறித்த குண்டுவெடிப்பு ஈரான் நாட்டின் தென்கிழக்கு பகுதியில் உள்ள கெர்மன் மாகாணத்தில் நடந்தது. இதில் 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்த சம்பவத்திற்கு மலேசியா இரங்கல் தெரிவித்து ஒற்றுமையுடன் துணை நிற்கிறது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தனது முகநூலில் பதிவிட்டுள்ளார்.
“அப்பாவிகளுக்கு எதிரான எந்தவொரு வன்முறையையும் மலேசியா எதிர்க்கிறது மற்றும் கடுமையாகக் கண்டிக்கிறது. பாலஸ்தீனத்தில் அப்பாவி மக்களை இஸ்ரேல் கொன்று குவிப்பதை உலகம் கண்டு கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் ஆகிவிட்டது, இரண்டு நாட்களுக்கு முன்பு லெபனானிலும் இந்த தாக்குதல் நடந்தது ” என்று அவர் அப்பதியில் கூறினார்.
வன்முறை நடவடிக்கையின் மூளையாக செயல்பட்டவர்களை நீதியின் முன் நிறுத்துமாறு மலேசியாவும் அழைப்பு விடுத்துள்ளதாக பிரதமர் மேலும் கூறினார்.