தமிழ்க் கடவுள் முருகப் பெருமானுக்கு கொண்டாடப்படும் பத்துமலை தைப்பூசத் திருவிழாவில் கலந்து கொண்ட டிஜிட்டல் துறை அமைச்சர் கோபிந்த் சிங் டியோ மற்றும் மனிதவள அமைச்சர் ஸ்டீவன் சிம் ஆகியோருக்கு உற்சாக வரவேற்பு நல்கப்பட்டது. லட்சக்கணக்கான பக்தர்கள் பத்துமலைத் தைப்பூசத்தில் கலந்து கொண்ட வேளையில் இம்முறை மடானி அரசாங்கத்தின் சார்பில் இவர்கள் இருவரும் கலந்து சிறப்பித்தனர்.
காலை பத்து மணிக்கு பத்துமலை ஸ்ரீசுப்பிரமணியர் கோவில் மயில் கேட்டை வந்தடைந்த அமைச்சர் கோபிந்த் சிங் டியோ மற்றும் ஸ்டீவன் சிம்முக்கு ஸ்ரீமகா மாரியம்மன் கோவில் தேவஸ்தானத்தின் பொறுப்பாளர்கள் மேள தாளத்துடன் அழைத்து வந்தனர். இவர்கள் இருவரும் வழி நெடுகிலும் மக்களுடன் கைகுலுக்கி தைப்பூச வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்.
கோபிந்த் சிங் டியோ தேவஸ்தான மண்டபத்திற்கு வந்தடைந்ததும் அவரை ஸ்ரீமகா மாரியம்மன் கோவில் தேவஸ்தானத்தின் தலைவர் டான்ஸ்ரீ ஆர். நடராஜா எதிர்கொண்டு வரவேற்றார். பின்னர் நடைபெற்ற விழாவில் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ மற்றும் ஸ்டீவன் சிம் ஆகியோருக்கு டான்ஸ்ரீ நடராஜா, அறங்காவலர் டத்தோ கண்ணா ஆகியோர் பொன்னாடை போர்த்தி மாலை அணிவித்து கெளரவித்தனர்.
இந்த விழாவில் பண்டார் கூங்சிக் நாடாளுமன்ற உறுப்பினர் கெல்வின், சிலாங்கூர் கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் பிரகாஷ், டமான்சாரா நாடாளுமன்ற தொகுதி ஒருங்கிணைப்பாளர் மாண்புமிகு சுரேஸ், மலேசியாவுக்கான இந்திய தூதர் ரெட்டி, தேவஸ்தானத்தின் செயலாளர் கு.சேதுபதி, பொருளாளர் டத்தோ பி.அழகன், அறங்காவலர் க. கதிரேசன் உட்பட பலரும் கலந்து சிறப்பித்தனர்.