சிங்கப்பூரில் நடைபெற்ற 4ஆவது ஆசியான் டிஜிட்டல் அமைச்சர்கள் கூட்டத்தில் (ADGMIN) மலேசியா டிஜிட்டல் துறை அமைச்சர் மாண்புமிகு கோபிந்த் சிங் டியோ கலந்து சிறப்பித்தார். இக்கூட்டத்தில் சிங்கப்பூர் தகவல் தொடர்பு, தகவல் பிரிவு அமைச்சர் மாண்புமிகு Mrs Josephine Teo, அமெரிக்காவின் துறை அமைச்சர் மாண்புமிகு Nathaniel C. Fick, சீன தொழில் மற்றும் தகவல் தொழில்நுட்ப துணை அமைச்சர் Zhang Yunming, ஜப்பானிய உள்நாட்டு விவகாரங்கள் மற்றும் தகவல் தொடர்புக்கான மாநில அமைச்சர் Koichi Watanabe மற்றும் சர்வதேச தொலைத் தொடர்பு ஒன்றியத்தின் (ITU) பொதுச் செயலாளர் Doreen Bogdan-Martin ஆகியோரையும் சந்தித்ததாக அவர் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் அந்த நாடுகளைச் சேர்ந்த தமது சகாக்களுடன் இருதரப்பு சந்திப்புகளை நடத்துவதற்கான வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டதாக அவர் சொன்னார். இத்துறையில் மலேசியா உலகளாவிய நிலையில் முன்னேற்றம் காண எடுத்துவரும் ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளைத் தாம் விவரித்ததாகவும் 2025ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அது 25.5 விழுக்காடு வருவாயைப் பெற ஒரு மில்லியன் தொழில் முனைவோருக்கு அது சார்ந்த பயிற்சியை வழங்கியிருப்பதாகவும் அதில் 280 ஆயிரம் மகளிர் தொழில் முனைவோரும் அடங்குவார்கள் என்றார்.
5ஜி அலைக்கற்றை தொடர்பில் நாடு 8.2 மில்லியன் சந்தாதாரர்களைப் பெற்றிருப்பதாகவும் அது வெகு விரைவான வளர்ச்சி பெற்று வருவதாகவும் அவர் எடுத்துரைத்தார். இந்த வளர்ச்சியானது 5ஜி அலைக்கற்றை உபகரணங்கள் குறைந்த விலையில் கிடைப்பதே முக்கிய காரணமாகும் என விளக்கியதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஆசியான் நாடுகள் பரஸ்பரம் ஒத்துழைத்து தகவல்களைப் பரிமாறிக் கொண்டால் இத்துறையில் பெரும் வளர்ச்சியை அடைய முடியும் என அவர் தெரிவித்ததாகக் குறிப்பிட்டார். இந்தக் கலந்துரையாடல் பலனளித்துள்ளதாகவும் மேலும் தங்களிடையே பகிரப்பட்ட நிகழ்ச்சி நிரலை முன்னெடுப்பதற்காக அவர்களுடன் தொடர்ந்து ஈடுபாட்டை எதிர்பார்ப்பதாகவும் கோபிந்த் சிங் தெரிவித்தார்.