கவின்மலர்
பாரிட் புந்தார்,
மார்ச்.23-
கடந்த 2010 ஆம் ஆண்டு சீனப்பள்ளிகளில் பயின்ற சீனர் அல்லாத மாணவர்களின் எண்ணிக்கை 9.5 விழுக்காடாக இருந்ததாகவும் 2020ஆம் ஆண்டு அதாவது பத்தாண்டு காலத்தில் அந்த எண்ணிக்கை 15.33 விழுக்காடாக உயர்ந்துள்ளது என்றும் கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள தரவு ஒன்று கூறுகிறது.
இதன் அடிப்படையில் பார்க்கும் போது சீனப்பள்ளிகளில் பயிலும் மொத்த மாணவர் எண்ணிக்கையில் ஏறத்தாழ 15 விழுக்காட்டை சீனர் அல்லாத மாணவர்கள் நிறைவு செய்கின்றனர் என்பது உறுதியாகிறது.
2023 ஆம் ஆண்டு புள்ளி விபரப்படி சீனப்பள்ளிகளில் மொத்தம் 5 லட்சத்து 27ஆயிரத்து 453 மாணவர்கள் பயின்றதாக கூறப்படுகிறது.அவர்களில் 15 விழுக்காட்டு மாணவர்கள் சீனர் அல்லாதவர் என்று கணக்கிட்டால் அதன் எண்ணிக்கை ஏறத்தாழ 79 ஆயிரத்து 118 என்று தெரிகிறது. இதன் வழி சீனப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை கடந்த பல ஆண்டுகளாக ஐந்து லட்சத்திற்கும் குறையாமல் இருக்க சீனரல்லாத மாணவர்களின் பங்களிப்பும் பெரிதும் உதவுகிறது என்பதை மறுப்பதற்கில்லை. இதற்கிடையே 2024 ஆம் ஆண்டின் கணக்குப்படி சீனப்பள்ளிகளில் ஏறத்தாழ 20 விழுக்காட்டு சீனர் அல்லாத மாணவர்கள் பயில்வதாக பேராசிரியர் ஒருவர் வெளியிட்டுள்ள தரவைக் கொண்டு பார்க்கும் போது சீனப்பள்ளிகளில் பயிலும் சீனர் அல்லாத மாணவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியிருக்கலாம் என்று மதிப்பிடப்படுகிறது