பி.ஆர்.ராஜன்
ஒற்றுமைத்துறை அமைச்சு அண்மையில் 2 தினங்கள் மலேசிய இந்தியர் உருமாற்றப் பிரிவு (மித்ரா) தொடர்பான ஒரு பட்டறையையும் ஆய்வையும் நடத்தியது. மலேசிய இந்தியர்களுக்கு என்ன தேவை என்பதை வரையறுப்பதற்காக ஒரு புளூபிரிண்டை தயாரிப்பதற்கு இந்த பட்டறை நடத்தப்பட்டது.
ஆனால் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நேரடியாக நியமனம் செய்த மித்ரா சிறப்புப் பணிக்குழுவின் தலைவர் ப.பிரபாகரனுக்கு அழைப்பு விடுக்கப்படாதது ஏன்? தனிப்பட்ட வன்மத்தால் அவருக்கு அழைப்பு விடுக்கப்படவில்லையா? இது பிரதமரையே அவமதிப்பதாகவே உள்ளது என்று மித்ராவுக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன.
மித்ராவின் திட்டங்களை, நிதி வழங்குதலை ஏற்று செயல்படுத்தக்கூடிய பொறுப்பில் இருக்கும் பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பிரபாகரன் ஒதுக்கப்பட்டிருப்பது ஜீரணிக்க முடியாத ஒரு விவகராமாக உள்ளது என்று அந்த வட்டாரங்கள் மேலும் கூறின.
நோய்வாய்ப்பட்டு நடக்கமுடியாமல், பேச முடியாமல் இருக்கும் ஒருவருக்கு இந்த பட்டறையில் கலந்து கொள்வதற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கின்ற நிலையில் மித்ராவின் செயல் திட்டங்களை அமல்படுத்தும் பொறுப்பில் இருக்கும் பிரபாகரனுக்கு அழைப்பு விடுக்கப்படாததற்கு யார் காரணம்?
மித்ரா ஒற்றுமைத்துறை அமைச்சின் கீழ் வைக்கப்பட்ட நாளிலிருந்து அதன் துணை அமைச்சர் பிரபாகரனோடு முட்டல் மோதலில்தான் காலத்தைக் கடத்திக் கொண்டிருக்கிறார். இந்திய சமுதாயம் நலன் சார்ந்த இந்த விவகாரங்களில் தன்மூப்பாகவும் தன்னிச்சையாகவும் அவர் எடுக்கும் வன்மமான முடிவுகள் சமுதாயத்திற்கு ஒட்டுமொத்தமாக மிகப் பெரிய இழப்பை ஏற்படுத்துவதாக இருக்கிறது என்று அந்த வட்டாரங்கள் குறிப்பிட்டன.
சமுதாய நலன் மீது அவருக்கு அக்கறை இல்லை. தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகளை கக்கிக்கொண்டிருக்கிறார். இதை அவர் முழுநேர பணியாகச் செய்துகொண்டிருக்கிறார். எடுத்தோம், கவிழ்த்தோம் என்று பொறுப்பில் இல்லாமல் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார். பிரதமர் நேரடியாக நியமனம் செய்த மித்ரா சிறப்புப் பணிக்குழுவின் தலைவருக்கே இந்த நிலை என்றால் மற்றவர்கள் எம்மாத்திரம்?
பிரபாகரன் விளக்கம் அளிப்பாரா?
இதனிடையே ஒற்றுமைத்துறை அமைச்சு ஏற்பாடு செய்திருந்த மித்ரா இலக்கு தொடர்பான பட்டறை, ஆய்வு கூட்டத்திற்கு தமக்கு அழைப்பு விடுக்கப்படாதது குறித்து பிரபாகரன் இதுவரை வாய் திறவாமல் இருப்பது மிகுந்த ஏமாற்றமாக இருக்கிறது.
இனியாவது தனக்கு ஏற்பட்ட இந்த அவமானம் குறித்து அவர் தௌிவான விளக்கம் அளிக்க வேண்டும். இந்திய சமுதாயம் அந்த விளக்கத்தைக் கேட்பதற்கு காத்திருக்கிறது.