இசைஞானியின் பயோபிக்கான ‘இளையராஜா’ படத்திற்காக அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளார் நடிகர் தனுஷ். கடந்த சில தினங்களுக்கு முன்பாக இசைஞானி இளையராஜாவின் பயோபிக் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. தமிழ் சினிமாவின் ஒப்பற்ற இசை கலைஞரான இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு படமாக உருவாகவுள்ளது இசை காதலர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பினை கிளப்பியுள்ளது. இந்நிலையில் இளையராஜாவின் பயோபிக் தொடர்பாக அசத்த்தலான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவையும் இளையராஜாவையும் பிரிக்கவே முடியாது. அந்தளவிற்கு பல ஆண்டு காலமாக திரையுலகை தனது இசையால் கட்டிப்போட்டுள்ளவர் இசைஞானி. தனது செயல்பாடுகளால் ஒரு சில சர்ச்சைகளில் சிக்கினாலும், இளையராஜாவிற்கான ரசிகர்கள் பட்டாளம் என்பது எப்போதும் குறைந்ததே இல்லை. சினிமா ரசிகர்கள் மட்டுமல்லாமல் திரையுலகை சார்ந்தவர்களும் இளையராஜாவின் இசைக்கு காதலர்கள்.
இந்தளவுக்கு பல ஆண்டு காலமாக தனது இசையால் திரையுலகை ராஜ்ஜியம் செய்து வரும் இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு படமாக உருவாகவுள்ளது. இதற்கான துவக்க விழா கடந்த 20 ஆம் தேதி சென்னையில் நடைபெற்றது. இயக்குனர் இமயம் பாரதிராஜா, உலக நாயகன் கமல், வெற்றிமாறன் ஆகியோர் இவ்விழாவில் பங்கேற்று இளையராஜாவின் சாதனைகள் குறித்து பேசினர்.
கோலிவுட் சினிமாவே பெரிதும் எதிர்பார்க்கும் படமாக உருவாகவுள்ள இளையராஜாவின் பயோபிக்கில் அவரின் வெறித்தனமான ரசிகரான தனுஷ் இசைஞானியாக நடிக்கவுள்ளார். அத்துடன் இப்படத்தினை கேப்டன் மில்லரை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்கவுள்ளார். ராவான படங்களை இயக்குவதில் பெயர் போன அருண் மாதேஸ்வரன் இந்த இளையராஜா பயோபிக்கை இயக்கவுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் திரையுலகினர் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் ‘இளையராஜா’ படம் குறித்து லேட்டஸ்ட் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி இப்படம் இரண்டு பாகங்களாக உருவாக இருக்கிறதாம். அத்துடன் கமல் ‘இளையராஜா’ படத்திற்கு திரைக்கதை எழுதுவார் என கூறப்பட்ட நிலையில், அவர் தற்போது தனது அடுத்த ப்ராஜெக்ட்களில் பிசியாக இருப்பதால் தனுஷே ‘இளையராஜா’ படத்திற்காக திரைக்கதை எழுதவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது சேகர் கம்முலா இயக்கத்தில் ‘குபேரன்’ படத்தில் தனுஷ் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.