பாலேக் புலாவ்: பினாங்கு ஜாலான் ராஜாவளியில் உள்ள அடுக்குமாடியின் மின்தூக்கியில் டவுன் சிண்ட்ரோம் குறைப்பாடுடைய ஆடவர் மீது சுடுநீரை ஊற்றியதாகக் கூறப்படும் ஒரு பெண்ணை பினாங்கு போலீசார் நேற்று இரவு கைது செய்தனர். 39 வயதான சந்தேக நபர் இரவு 9.21 மணியளவில் அடுக்குமாடி குடியிருப்புப் பகுதியில் தடுத்து வைக்கப்பட்டதாக பாராட் டயா துணை போலீஸ் தலைவர் ஜஃப்ரி ஜைன் தெரிவித்தார்.
சம்பவம் தொடர்பான விசாரணைகளை எளிதாக்குவதற்காக அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் பெண், இன்று விளக்கமறியலில் வைக்கப்பட்டதாக பெர்னாமா அவரை தொடர்பு கொண்டபோது கூறினார். பாதிக்கப்பட்ட 33 வயதான நபர் 16ஆவது மாடியில் உள்ள தனது அடுக்குமாடி குடியிருப்புக்கு திரும்பிக் கொண்டிருந்த போது இந்த சம்பவம் நடந்துள்ளது. சம்பவத்தின் போது சந்தேக நபரும் பாதிக்கப்பட்டவரும் மட்டுமே மின்தூக்கியில் இருந்ததை ரகசிய கண்காணிப்பு கேமரா வழி அறியப்படுவதாக ஜஃப்ரி கூறினார்.
குற்றவியல் சட்டத்தின் பிரிவு 324இன் கீழ் ஆபத்தான ஆயுதங்கள் அல்லது வழிமுறைகளால் தானாக முன்வந்து காயப்படுத்தியதற்காக வழக்கு விசாரிக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார். பினாங்கு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட பாதிக்கப்பட்டவரின் வலது பக்கத்தின் முன் மற்றும் பின்புறம் சுடுநீரின் தாக்கம் காரணமாக தீக்காயங்கள் ஏற்பட்டதாக மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர். இந்த சம்பவத்தின் 20 வினாடி வீடியோவும் சமூக ஊடகங்களில் வைரலாக பரவியது. மேலும் அந்த பெண்ணின் செயலுக்கு நெட்டிசன்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.