கோலாலம்பூர்:
வெளிநாட்டு ஊழியர்கள் அளிக்கும் புகார்களையும் அவர்கள் மீதான துன்புறுத்தல் வழக்குகளையும் கையாளுவதற்கு மனிதவளத்துறையின் கீழ் ஒரு தனிப்பிரிவை அமைப்பது குறித்து அமைச்சகம் ஆராய்ந்து வருகிறது.
“வெளிநாட்டு ஊழியர்களின் புகார்களையும் துன்புறுத்தல் வழக்குகளையும் கையாள்வது எளிதல்ல என்பதை அமைச்சகம் அறிந்துள்ளது.
சில வேளைகளில் உள்ளூர்த் தொழிலாளர்களைப் போல் சட்ட நடவடிக்கையை மேற்கொள்ளும் உரிமை புலம்பெயர் ஊழியர்களுக்குக் கிடைக்காமல் போகலாம், அதனைக் கருத்தில் கொண்டு இந்த தனிப்பிரிவு உருவாக்கப்படுவதாக மனிதவள அமைச்சர் ஸ்டீவன் சிம் செய்தியாளர்களிடம் இன்று (மே 9) சொன்னார்.
துன்புறுத்தல், பணியிடப்பிரச்சனைகள் தொடர்பாகப் புகார் அளிப்பதில் வெளிநாட்டு ஊழியர்கள் எதிர்கொள்ளும் நெருக்கடி குறித்து அரசு சாரா நிறுவனங்கள் எடுத்துரைத்ததை அடுத்து, அதற்கென தனிப்பிரிவு அமைக்கும் யோசனை எழுந்ததாக சிம் குறிப்பிட்டார்.
மனிதவளத் துறையின்கீழ் அப்பிரிவை அமைக்க தாம் கடப்பாடு கொண்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
வெளிநாட்டு ஊழியர்களின் புகார்களைக் கையாளும் தனிப்பிரிவில் மொழிபெயர்ப்பாளர் ஒருவர் இடம்பெறலாம் என்றும் அவர் கூறினார்.
அத்துடன், புகார் அளிக்கும் ஊழியர்களுக்குத் தற்காலிகத் தங்குமிட வசதியும் வழங்கப்படலாம் என்றும், உள்ளூர்த் தொழிலாளர் ஒருவர் புகாரளித்தால் அவர் திரும்பச் செல்ல வீடு உள்ளது. ஆனால், வெளிநாட்டு ஊழியர்களுக்கு அவ்வசதி இல்லை. மேலும் அவர்களால் தங்கள் விடுதிக்கு திரும்பிச் செல்ல முடியாமல் போகலாம்,” என்றும் அவர் கூறினார்.