அடுத்த பொது தேர்தலில் பிரதமர் வேட்பாளராக டான்ஸ்ரீ முஹிடின் யாசின் களமிறங்குவதற்கு அம்னோ – பாஸ் இணக்கம் தெரிவித்துள்ளன.
முவாபாக்காட் நேஷனல் சந்திப்பு கூட்டத்தில் இவ்விவகாரம் கலந்து பேசப்பட்டது என்று அம்னோ தலைவர் ஒருவர் தெரிவித்தார்.
முன்னதாக, அடுத்த பொதுத் தேர்தலில் டான்ஸ்ரீ முஹிடின் யாசின் பிரதமர் வேட்பாளராக களம் காண்பதற்கு பாஸ் கட்சியின் தேசிய தலைவர் அப்துல் ஹடி அவாங் ஆதரவு தெரிவிப்பதாக கூறியிருந்தார்.
நாட்டின் மேம்பாட்டிற்காகவும் மக்களின் நல்வாழ்விற்கும் முஹிடின் தலைமையிலான பெரிக்காத்தான் நேஷனலுக்கு பாஸ் ஆதரவு கொடுப்பதாக தமது முகநூல் பதிவில் அவர் குறிப்பிட்டிருந்தார்.
முஹிடின் யாசின் பிரதமர் வேட்பாளராக தேர்வு செய்வதற்கு அம்னோ மற்றும் பாஸ் முழு ஆதரவு வழங்குவதாக தேசிய முன்னணியின் செயலாளர் டான்ஸ்ரீ அனுவார் முசா தெரிவித்தார்.
முஹிடினுக்கு வழங்கப்படும் ஆதரவு அனைத்து கட்சிகளின் மூலமாகவும் தெரிவிக்கப்படும். இதில் அம்னோ மற்றும் பாஸ் கட்சியின் கருத்து ஒன்று தான் என்று அவர் கூறினார்.
நாட்டின் அரசியல் நிலைத்தன்மை நிலைத்திருக்க தேசிய முன்னணி தலைவர்கள், பாஸ், சபா, சரவாக் கட்சிகள் முஹிடின் யாசினுக்கு தங்களின் ஆதரவினை தெரிவித்தனர்.
அம்னோ தலைவர் டத்தோஸ்ரீ அகமட் ஸாஹிட் ஹமிடி, பாஸ் தலைவர் ஹடி அவாங், மசீச தலைவர் டத்தோஸ்ரீ வீ கா சியோங், மஇகா தேசிய தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன், பெர்சத்து கட்சியின் செயலாளர் ஹம்சா ஸைனுடின், சபா, சரவாக் கட்சிகளின் தலைவர்கள் ஆகியோர் டான்ஸ்ரீ முஹிடினுடனான 2 மணி நேரம் சந்திப்பு கூட்டத்தில் கலந்து கொண்டனர். இதன் மூலம் முஹிடினுக்கு ஆதரவு பெருகி உள்ளது.