ஆளும் கம்யூனிஸ்ட் கட்சிக்குள் கடும் எதிர்ப்பு வலுத்து வரும் நிலையில் நேப்பாள பிரதமர் ஷர்மா ஒலி தமது பதவியை ராஜினாமா செய்யக்கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாட்டு மக்களிடையே உரையாற்றும் போது, தமது ராஜினாமா அறிவிப்பை ஷர்மா ஒலி வெளியிடுவார் எனவும் கூறப்படுகிறது. நேப்பாள பிரதமர் ஷர்மா ஒலி சீனாவுடன் நெருக்கம் காட்டிக்கொண்டு இந்தியாவுடன் மல்லுக்கட்டி வருகிறார்.
இந்திய நிலப்பகுதிகளை நேப்பாள வரைபடத்தில் இணைத்து புதிய சர்ச்சைகளை உருவாக்கினார். இதனால் நேப்பாளம்- இந்தியா இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டது. அதுவும் சீனாவுடனான எல்லை மோதல் உச்சகட்டமாக இருக்கும் நிலையில் நேப்பாளம் இந்தியாவுக்கு குடைச்சல் கொடுத்தது.
இது, அந்த நாட்டு மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி இருந்தது. இதன் உச்சகட்டமாக தமது தலைமையிலான நேப்பாள அரசை கவிழ்க்க இந்தியா சதி செய்கிறது என்று பகிரங்கமாகவே ஷர்மா ஒலி குற்றம்சாட்டினார்.
இது, மிகப்பெரும் சர்ச்சையாக வெடித்தது. நேப்பாளத்தில் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியில் ஷர்மா ஒலிக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதனால் ஷர்மா ஒலி பதவியை ராஜினாமா செய்தாக வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது. இதனிடையே ஷர்மா ஒலிக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகின. பின்னர் அவர் வீடு திரும்பிவிட்டதாகவும் கூறப்பட்டது.