சீனாவின் செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் புதிய செயலிகளை தமிழக ஐடி நிறுவனங்கள் உருவாக்க வேண்டும் என்று உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி யோசனை தெரிவித்துள்ளார். சீனாவுடன் எல்லை பிரச்சனை நீடித்து வரும் நிலையில், பாதுகாப்பு காரணங்களுக்காக டிக் டாக், ஹலோ போன்ற சமூக வலைத்தளங்கள் உள்ளிட்ட 59 சீன செயலிகள் இந்தியாவில் செயல்பட மத்திய அரசு முழுமையாக தடை விதித்திருக்கிறது.
இதையடுத்து, கூகுள் பிளே ஸ்டோரில் அந்த செயலிகள் காலாவதியாகிவிட்டன. பல மாதங்கள் இந்த சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்திய கோடிக்கணக்கான இந்தியர்கள், இப்போது அதே போன்ற பயன்படுத்துவதற்கு எளிமையான சமூக வலைத்தள செயலிகளுக்காக காத்திருக்கின்றனர்.
இந்த சூழலில் தற்சார்பு பொருளாதார கொள்கையை உயர்த்தும் வகையில் இந்திய நிறுவனங்களால் தயாரிக்கப்படும் பொருட்களைப் பயன்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை அதிகரித்துள்ளது. புதிய சமூக வலைத்தள செயலிகளுக்கான தேவை உருவாகியுள்ள இந்த காலக்கட்டத்தில், தகவல் தொழில் நுட்த் துறையினர் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ் பி வேலுமணி ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.