பெட்டாலிங் ஜெயா, ஆகஸ்டு 1:
நாட்டில் இரத்த வங்கியில் இரத்தத்தின் இருப்பு மிகக் குறைவாக இருக்கின்றது. கோவிட் -19 தொற்றுக்கள் அதிகரிப்பு காரணமாக இரத்த வழங்கல் குறைந்து வருவதால், இரத்த தானம் செய்யுமாறு சுகாதார அமைச்சகம் (MOH) பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
சுகாதார இயக்குநர் ஜெனரல் டான் ஸ்ரீ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 1) வெளியிட்ட அறிக்கையில், அவசரகாலம் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து நாடு முழுவதும் இரத்த தானம் செய்வதை ரத்து செய்ததால் இரத்த விநியோகமும் குறைந்துவிட்டது.
நாடு முழுவதும் நோயாளியின் பயன்பாட்டிற்கு வாரத்திற்கு சராசரியாக தேவைப்படும் இரத்தத்தின் அளவு 14,000 பைகள் ஆகும், இதில் தேசிய இரத்த மையம் உட்பட கிள்ளாங் பள்ளத்தாக்கிற்குள் உள்ள மருத்துவமனைகளுக்கு வாரத்திற்கு 3,500 முதல் 4,000 பைகள் தேவைப்படுகிறது.
“இருப்பினும், மே 31 முதல் ஜூலை 25 வரை கோவிட் -19 தொற்று நோய்கள் அதிகரித்ததால் முழு நாட்டிற்கும் இரத்த சேகரிப்பில் கணிசமான அளவு குறைவடைந்தது” என்று அவர் கூறினார்.
“அத்தோடு இரத்த தானம் செய்பவர்களும் குறைந்து கொண்டே வருவது கவலைக்குரியது மற்றும் இது நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் செயலை பாதிக்கும்” என்றும் டாக்டர் ஹிஷாம் மேலும் கூறினார்.
“அறிகுறியற்ற, கோவிட் -19 தொற்று இல்லாத அல்லது 14 நாட்களுக்குள் கோவிட் -19 நோயாளிகளுடன் நெருங்கிய தொடர்பு இல்லாதவர்களுக்கு மட்டுமே இரத்த தானம் செய்ய முடியும்.
முககவசம் அணிதல், வெப்பநிலை திரையிடல், மைசெஜத்தேரா கியூஆர் குறியீடு ஸ்கேனிங் மற்றும் சுகாதார அறிவிப்பு படிவங்களை பூர்த்தி செய்தல் உள்ளிட்ட பிற பொதுவான SOP களும் இரத்த தானம் செய்ய வருபவர்களிடம் முழுவதும் கவனிக்கப்படும் என்றார்.
கடுமையான SOP களுடன், ஜாலான் துன் ரசாக்கில் உள்ள தேசிய இரத்த மையம், கோலாலம்பூரில் உள்ள மிட்வலி மாலின் நன்கொடை மையம், புத்ராஜெயாவில் புஸ்பனிதா நன்கொடை மையம் மற்றும் நாடு முழுவதும் உள்ள இரத்த வங்கி மையங்கள் போன்ற நியமிக்கப்பட்ட இடங்களில் இரத்த தானம் செய்ய பொதுமக்கள் ஊக்கிவிக்கப்படுகின்றனர்.
www.pdn.gov.my என்ற அகப்பக்கம் அல்லது தேசிய இரத்த மையத்தின் முகநூல் பக்கத்தின் மூலம் செயல்படும் நேரம் மற்றும் பிற இரத்த தான மையங்கள் பற்றிய கூடுதல் தகவல்களை பொதுமக்கள் பெறலாம் என்றும் அவர் தெரிவித்தார்.