அசாஜெயா: ஜாலான் கோத்தா சமரஹான்- அசாஜெயாவின் கிலோமீட்டர் 7 இல் இன்று அதிகாலை மூன்று வாகனங்கள் மோதிய சாலை விபத்தில் இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இன்று அதிகாலை 4.55 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில், மோட்டார் சைக்கிள், பலநோக்கு வாகனம் (MPV) மற்றும் லோரி ஆகிய மூன்று வாகனங்கள் மோதிக்கொண்டன.
இச்சம்பவத்தில் ” 67 வயதான மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் மற்றும் 36 வயதுடைய பெரோடுவா அல்சா பலநோக்கு வாகன (MPV) ஓட்டுநர் ஆகியோர் பலத்த காயங்களால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்”.
இதேவேளை, 27 வயதான லோரி ஓட்டுநர் காயமடையவில்லை என்று சரவாக் போக்குவரத்து புலனாய்வு மற்றும் அமலாக்கத் துறையின் தலைவர், கண்காணிப்பாளர் அலெக்சன் நாக சாபு கூறினார்.
கோத்தா சமரஹானிலிருந்து அசாஜெயா நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள், MPV மீது நேருக்கு நேர் மோதியதில் விபத்து ஏற்பட்டது.
“பெரோடுவா அல்சா MPV அசாஜெயாவிலிருந்து கோத்தா சமரஹான் நோக்கி சென்று கொண்டிருந்தது, முன்னால் மற்றொரு வாகனத்தை முந்திச் செல்ல முயன்றபோது, மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் மீது மோதியது.
“MPV இன் ஓட்டுநர் தப்பிக்க முயன்றதாக நம்பப்படுகிறது, ஆனால் அவரது வாகனம் முதல் சம்பவம் நடந்த இடத்திலிருந்து 500 மீட்டர் தொலைவில் வந்துகொண்டிருந்த லோரியுடன் மோதியது” என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
சம்பவ இடத்திற்கு வந்த மருத்துவக் குழுவினரால், பெரோடுவா அல்சா MPVவின் ஓட்டுநர் மற்றும் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஆகியோர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக உறுதிப்படுத்தப்பட்டது.
“இந்த சம்பவம் குறித்து போலீசார் இன்னும் கூடுதல் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர், மேலும் சாலை போக்குவரத்து சட்டம் 1987 இன் பிரிவு 41 (1) இன் படி வழக்கு விசாரிக்கப்படுகிறது,” என்று அவர் கூறினார்.