கோத்தா கினாபாலு, செப்.29 :
சட்டவிரோதமாக சபா மாநிலத்திற்குள் நுழைந்ததற்காக கைது செய்யப்பட்ட மொத்தம் 527 பிலிப்பைன்ஸ் நாட்டவர்கள், மாநில குடிநுழைவுத் துறையால் அவர்களது சொந்த நாட்டிற்கு நாடு கடத்தப்பட்டனர்.
சபா குடிவரவுத் துறையின் இயக்குநர் சித்தி சலேஹா ஹபீப் யூசாஃப் கூறுகையில், நேற்று புதன்கிழமை (செப்.28) இரவு 9.15 மணிக்கு தெற்கு பிலிப்பைன்ஸுக்குச் செல்லும் எம்வி அந்தோனியா 1 கப்பலில் ஏற்றப்பட்ட பின்னர், சண்டாகான் துறைமுகத்திலிருந்து அவர்கள் சொந்த நாட்டிற்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.
நாடு கடத்தப்பட்டவர்களில் 383 ஆண்கள், 106 பெண்கள், எஞ்சியவர்கள் குழந்தைகள் என அவர் கூறினார்.
அவர்கள் அனைவரும் சண்டாகானுக்கு மாற்றப்படுவதற்கு முன்னர், கோத்தா கினாபாலு, பாப்பார், சண்டாகான் மற்றும் தாவாவ் ஆகிய நான்கு சபா குடிவரவுக் முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.
இந்த ஆண்டு பிலிப்பைன்ஸ் நாட்டினரை உள்ளடக்கிய மூன்றாவது நாடு கடத்தல் செயல்முறை இது என்று, அவர் இன்று வியாழன் (செப்.29) வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.