ராமேஸ்வரி ராஜா, தாப்பா, நவ. 9-
டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப்தான் தேசிய முன்னணியின் பிரதமர் வேட்பாளர். இதனை அம்னோ தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ அமாட் ஸாஹிட் ஹமிடியே அம்னோ பொதுப் பேரவையில் தெளிவாகத் தெரிவித்து விட்டார்.
குழப்பம் ஏற்படுத்துவதற்கு ஒன்றும் இல்லை என்பதற்காக இதை வைத்தே குழப்பிக்கொண்டிருக்கின்றனர் எதிர்க்கட்சியினர் என டத்தோஸ்ரீ எம். சரவணன் சாடினார்.
பொது மக்கள் சந்திப்பிற்குப் பின், இங்குள்ள அம்னோ மண்டபத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார். தேசிய முன்னணி சுமுகமான முடிவை எடுத்து அதன்படி செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
அரசியலில் குழப்பம் ஏற்படுத்துவதற்காகவும் பேச எதுவும் இல்லை என்பதாலும் பேச வேண்டும் என்பதற்காகவும் இதுபோன்ற தேவையற்ற குழப்பங்களை அவர்கள் ஏற்படுத்துகின்றனர் எனவும் தாப்பா நாடாளுமன்றத் தொகுதி தேசிய முன்னணி வேட்பாளரான அவர் கூறினார்.
இங்கு வறிய நிலை மக்களுக்கான ‘பிரிமா’ எனப்படும் மலிவு விலை வீடமைப்புத் திட்டம் பீடோர் சாலையில் மேற்கொள்ளப்பட்டது. அதில் 2,000 வீடுகள் கட்டப்பட்டு தற்சமயம் 400க்கும் அதிகமானோர் குடிபுகுந்து விட்டனர் என அவர் தெரிவித்தார்.
5,000 வீடுகள் கட்டும் திட்டம் மேற்கொள்ளப்படவிருந்த நிலையில், கடந்த பொதுத்தேர்தலின்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டு திட்டமும் தடைப்பட்டது. மீண்டும் ஆட்சிக்கு வந்தபின் அதன் பணிகள் கோவிட் -19 தொற்றுச் சிக்கலினால் தாமதமாகின.
இங்கு நிலவிவரும் சாலை நெரிசல் தொடர்பிலான சாலை விரிவாக்க வேலைகளும் அதே சிக்கலைச் சந்தித்தது. இதன் தீர்வுகளுக்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்தப் பிரச்சினைக்கான தீர்வுதான் முதலில் கவனிக்கப்படும் என டத்தோஸ்ரீ சரவணன் உறுதியளித்தார்.
குறிப்பாக, இங்குள்ள மக்களின் அதிமுக்கிய தேவையாக கல்வி, தொழில்திறன் அதிகரிப்பு, வேலை வாய்ப்புகளும் கருதப்படுகின்றன. அதற்கான ஏற்பாடுகளும் சேவைகளும் இங்கு முறையாக ஏற்படுத்தப்பட்டுள்ளன. அடுத்த முக்கிய நடவடிக்கையாக இங்குள்ள மக்களின் முக்கியத் தேவையான சாலை விரிவாக்கமும் மலிவு வீட்டுமனை வசதியும் ஏற்படுத்தப்படும் என நவீன மேம்பாடுகள் குறித்து எழுப்பிய கேள்விக்கு அவர் விளக்கமளித்தார்.