தும்பாட்:
கடந்த வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய இரு தினங்களில் தும்பாட் பகுதியைச் சுற்றி நடத்தப்பட்ட இரண்டு சோதனைகளின் மூலம், RM11,182 மதிப்புள்ள 1,064 யாபா போதை மாத்திரைகள் வைத்திருந்ததாக நம்பப்படும் இருவரை போலீசார் கைது செய்தனர்.
கடந்த வியாழன் மாலை 6 மணியளவில் நடந்த முதல் சோதனையில், கம்போங் செராங் மெலிந்தாங், சாபாங் எம்பாட் என்ற இடத்தில் 20 வயது மதிக்கத்தக்க வேலையில்லாத ஒருவரை போலீசார் கைது செய்தனர், அவரிடமிருந்த 5,962 மதிப்புள்ள 542 யாபா போதை மாத்திரைகளை பறிமுதல் செய்ததாக தும்பாட் மாவட்ட காவல்துறைத் தலைவர், துணை ஆணையர் முகமட் கைரி ஷாஃபி கூறினார்.
“இந்தக் கைதினைத் தொடர்ந்து, அடுத்த நாள் கம்போங் கோலம் தெரத்தாய், பாலேக்பாங்கில், இரவு 11 மணியளவில் 30 வயதான ஒரு விதவை ஒருவர் கைது செய்யப்பட்டார், அவரது கால்சட்டை பாக்கெட்டில் RM5,220 மதிப்புள்ள 522 யாபா போதை மாத்திரைகள் காவல்துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டது,” என்று அவர் நேற்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
சம்பந்தப்பட்ட இருவரும் மெத்தம்பேட்டமைன் பாவித்திருப்பது சோதனையில் கண்டறியப்பட்டதாகவும், கடந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து அவர்கள் போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்ததாகவும் அவர் கூறினார்.
மேலும், அவர்களில் ஒருவர் வரும் வியாழன் வரையிலும் மற்றவர் (விதவைப்பெண்) வெள்ளிக்கிழமை வரையிலும் ஆபத்தான போதைப்பொருள் சட்டம் 1952 இன் பிரிவு 39B இன் படி மேலதிக விசாரணைக்காக போலீஸ் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என்று அவர் சொன்னார்.