Home Top Story புற்றுநோய் பாதிப்பை அதன் ஆரம்பத்திலேயே அடையாளம் கண்டுகொள்வது எப்படி?

புற்றுநோய் பாதிப்பை அதன் ஆரம்பத்திலேயே அடையாளம் கண்டுகொள்வது எப்படி?

கேன்சர் நோயைப் போலவே உலகில் அதனால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையும் அசுரத்தனமாக வளர்ந்து வருகின்றன. அச்சுறுத்தலுக்குரிய புற்றுநோய் பாதிப்பை அதன் தொடக்கத்திலேயே அடையாளம் கண்டுகொண்டால் அதிலிருந்து விடுபடுவதும் எளிதாகும்.

புற்றுநோய் பாதிப்புக்கு ஆளாவோர் மற்றும் மரணமடைவோர் குறித்த செய்திகள் அனுதினம் வெளியாகி பொதுமக்களை பீதிக்கு ஆளாக்கி வருகின்றன.

புகை, மது உள்ளிட்டவைதான் புற்றுக்கு வழிவகுக்கும் என்பது மாறி, மரபு ரீதியிலான காரணங்கள், வாழ்க்கைச்சூழல், உணவூட்டம் ஆகியவையும் கூட புற்றுநோய்க்கு வித்திடுகின்றன. அன்றாடம் பணி நிமித்தம் போதிய உடல் உழைப்பின்றி அதிக நேரம் அமர்ந்திருப்பது கூட கேன்சர் பாதிப்புக்கு வாய்ப்பாகும் என்கிறது அண்மையில் வெளியான மருத்துவ ஆய்வு.

புற்றுநோய் அச்சுறுத்தலுக்கு உரியது என்பதை மறுப்பதற்கில்லை. அதே வேளையில் புற்று பாதித்த அனைவருமே மரணமடைவதில்லை. நவீன சிகிச்சைகள் மூலம் புற்று நோய்க்கு எதிராக போராடி மீண்டவர்கள் ஏராளம். ஆனால் அதற்குள் வங்கி இருப்பும், சொத்தும் வெகுவாய் கரைந்திருக்கும். மாறாக புற்றுநோயை அதன் ஆரம்ப நிலையிலேயே அடையாளம் கண்டுகொண்டால் சிகிச்சை நடைமுறைகளும், விரைந்து குணம்பெறுவதும் எளிதாகும். உடலில் வெகுசாதாரணமாக தென்படும் சிறு அறிகுறிகளையும் கண்டறிவதும், மருத்துவ ஆலோசனை மூலம் ஐயம் களைவதும் இதில் முக்கியம்.

பசியின்மை, திடீரென உடல் எடை குறைதல் அல்லது அதிகரித்தல், ரத்தத்தில் ஹீமோகுளோபின் வெகுவாய் குறைவது, உணவருந்த ஆரம்பித்ததுமே வயிறு நிரம்பியதாக உணர்வது ஆகியவை புற்றுநோயின் பரவலான அறிகுறிகளாகும்.

மலத்தில் தென்படும் ரத்தம், கருமை நிற திட்டுக்கள் தென்படுவது அல்லது மலம் முழுமைக்குமே கருப்பாக அமைவது ஆகியவை மஞ்சள் காமாலை மட்டுமன்றி இரைப்பை மற்றும் குடல் புற்றுநோய்களுடன் தொடர்புடையதாக இருக்கலாம்.

பெண்களை அதிகம் பாதிக்கும் மார்பக புற்றுநோயை, தோலில் ஏற்படும் மாற்றங்கள், சிறிய கட்டிகள், மார்பகத்தின் வடிவத்தில் ஏற்படும் சிறு மாற்றங்கள் மூலமே சாதாரணமாக அடையாளம் கண்டுகொள்ளலாம். கருப்பை புற்றுநோயானது, வயிற்றுப்போக்கு, இரைப்பை அழற்சி, சற்று சாப்பிட்டதுமே வயிறு நிரம்பிய உணர்வு, வயிறு பெருப்பது போன்ற இரைப்பை மற்றும் குடல் பாதிப்புக்கான அறிகுறிகளை காட்டும். இவர்கள் இரைப்பை அழற்சிக்கான மருந்துகளை தொடர்ந்து எடுத்துக்கொண்டு, உள்ளுக்குள் புற்றுநோயை வெகுவாக வளார விடுவார்கள்.

ஒரு பொதுவான விதியாக, 6 வாரங்களில் குறையாத எந்த அறிகுறியும் தீவிரமாக எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். உடனடியாக மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டும். குறிப்பாக எடை இழப்பு உண்மையில் புற்றுநோயின் மிகவும் பொதுவான அறிகுறியாகும். எந்தவொரு நோயாளிக்கும் தன் உடல் எடையில் 10 சதவீதத்துக்கும் மேலாக அவருடைய முயற்சியின்றி இழப்பு ஏற்பட்டால், அது புற்றுநோய்க்கான முக்கிய அறிகுறியாக இருக்க வாய்ப்புண்டு.

பொதுவாக மூன்று வாரங்களுக்கு மேல் நீடிக்கும் தொடர் இருமல் நுரையீரல் புற்றுநோயின் முக்கியமான அறிகுறியாகும். ரத்த உறவுள்ள குடும்ப நபர்களில் அல்லது முன்னோர்களில் எவருக்கேனும் புற்றுநோய் இருந்திருப்பின், ஆரம்ப அறிகுறிகளின்போதே விரைந்து மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெறுவது அவசியமாகிறது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version