கோலாலம்பூர், மார்ச் 11-
போதைப் பொருளை பயன்படுத்தினார் என்ற சந்தேகத்தில் கடந்த மாதம் கைது செய்யப்பட்ட பின்னர் விடுவிக்கப்பட்ட டிங்கில் சட்டமன்ற உறுப்பினர் அடிப் ஷான் அப்துல்லா (சிலாங்கூர் மாநில பெர்சத்து இளைஞர் பிரிவுத் தலைவர்) கைது தினத்தன்று போதைப்பொருளை பயன்படுத்தியிருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக புக்கிட் அமான் போலீஸ் அறிவித்துள்ளது.
டாமான்சாராவில் உள்ள இன்னிசை விடுதி ஒன்றில் அடிப் ஷான் அப்துல்லா கைது செய்யப்பட்டதாக கடந்த மாதம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தை கோடி காட்டி பல்வேறு உலக இணையத்தளங்கள் அடிப் கைது சம்பவத்தை செய்தியாக வெளியிட்டிருந்தன.
எனினும், தான் கைது செய்யப்படவில்லை என அடிப் அப்போது மறுத்திருந்தார். கைது சம்பவத்தின்போது தான் இன்னிசை விடுதியில் இல்லை எனவும் அவர் தெரிவித்திருந்தார். இவ்விவகாரம் தொடர்பில் விரைவில் பத்திரிகையாளர்களை அழைத்து சந்திப்பை நிகழ்த்தப் போவதாகவும் அவர் அறிவித்திருந்தார்.
‘கைது சம்பவத்தின்போது நான் எனது பூச்சோங், பூலாவ் மெராந்தி வீட்டில் இருந்தேன் என்பதுதான் உண்மை என அவர் தெரிவித்தாலும் கைது சம்பவம் உண்மைதான் எனவும் சட்டத்துறை தலைவர் அலுவலகத்திற்கு இவ்வழக்கு அனுப்பி வைக்கப்பட்ட பின்னர் ‘மேல் நடவடிக்கை வேண்டாம் (no further action)’ என்பதாக காவல் துறைக்கு பதில் அனுப்பப்பட்டு விட்டதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.