வரும் சட்டப்பேரவை தேர்தலில் 2 தொகுதிகளில் போட்டியிட உள்ளதாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
சென்னை இராயப்பேட்டையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் புதிய அலுவலகத்தை அக்கட்சியின் பொது செயலாளர் டிடிவி.தினகரன் திறந்து வைத்து, கட்சிக் கொடியை ஏற்றினார்.
பின்னர் செய்தியாளர்கள் கேள்விகளுக்கு பதில் அளித்த டிடிவி தினகரன், வரும் சட்டமன்ற தேர்தலில் அமமுக தலைமையில் ஒரு பெரிய கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்திக்க உள்ளதாகவும், சிறையில் இருந்து விடுதலையாகி சசிகலா தமிழகம் முழுவதும் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளதாகவும் தெரிவித்தார்.
வரும் சட்டமன்ற தேர்தலில் ஏற்கனவே போட்டியிட்டு வெற்றிபெற்ற ஆர்.கே நகர் தொகுதியிலும் , தென் மாவட்டத்தில் ஒரு சட்டமன்ற தொகுதி என இரண்டு தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்துள்ளதாக டிடிவி.தினகரன் தெரிவித்தார்.