வாஷிங்டன் –
சீனாவின் ஹுபே மாநிலம் வுஹான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 145க்கும் அதிகமான நாடுகளில் பரவியுள்ளது.
இந்த வைரஸ் தாக்குதலுக்கு உலகம் முழுவதும் இதுவரை 5 ஆயிரத்து 600 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 1 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு வைரஸ் பாதிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் கடந்த வாரம் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் அதிபர் டொனால்டு டிரம்ப், துணை அதிபர் மைக் பென்சி மற்றும் பிரேசில் நாட்டு அதிபர் ஜெய்ர் போல்சனரோ பங்கேற்றனர்.
நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு பிரேசில் அதிபருடன் நாடு திரும்பிய தகவல் தொடர்பு செயலாளர் பஃபியோ வஜ்ஹர்டினுக்கு கொரோனா வைரஸ் பரவியிருப்பது சமீபத்தில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து வஜ்ஹர்டினுடன் கைகுலுக்கியும் புகைப்படமும் எடுத்துக்கொண்ட அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பிற்கும் கொரோனா பரவி இருக்கலாம் என சந்தேகம் எழுந்தது.
இதற்கிடையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், கூடிய விரைவில் கொரோனா பரிசோதனை செய்வேன் என்றார்.
இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வெள்ளை மாளிகையில் வைத்து கொரோனா பரிசோதனை செய்துகொண்டார். இந்தப் பரிசோதனையின் முடிவை வெளியிட்ட மருத்துவர், அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு கொரோனா வைரஸ் பரவவில்லை எனவும் அவர் ஆரோக்கியமாக இருப்பதாகவும் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.