இந்தியாவில் கொரோனா வைரஸ் காரணமாக 21 நாட்களுக்கு நாடு தழுவிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அத்தியாவசிய காரணங்களை தவிர பொதுமக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என உத்தரவிடப்பட்டுள்ளது.
எனினும் பல்வேறு இடங்களில் கொரோனா வைரசின் தீவிரத்தை மக்கள் புரிந்து கொள்ளாமல் தேவையின்றி வெளியே சுற்றி வருகின்றனர்.
தெலுங்கானாவில் தடை உத்தரவை மீறி வெளியே சுற்றியவர்களை போலீசார் தோப்புக்கரணம் போடவைத்தும், தடியடி நடத்தியும் கண்டித்தனர்.
ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் யாரும் வெளியே வரவேண்டாம் என்றும், அவ்வாறு வெளியே வருபவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என தெலுங்கானா அரசு அறிவிப்பு வெளியிட்டது.
இந்நிலையில் தெலுங்கானா முதல் மந்திரி சந்திரசேகர ராவ் கண்டிப்புடன் கூடிய எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில், “அமெரிக்காவில் ஊரடங்கு உத்தரவை நடைமுறைப்படுத்த ராணுவம் அழைக்கப்பட்டது.
எனவே, மக்கள் ஊரடங்கு விதிமுறைகளை பின்பற்றாவிட்டால், 24 மணி நேர ஊரடங்கை விதிக்க வேண்டிவரும்.
மேலும் தேவையின்றி நடமாடுவோரை கண்டதும் சுட உத்தரவு பிறப்பிக்க வேண்டியிருக்கும்.
அதுபோன்ற நிலைமையை ஏற்படுத்திவிடக்கூடாது என்று மக்களை நான் கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.