கொரோனா பாதித்தவர்களுக்கு மருத்துவமனைகளில் எந்த மாதிரி சிகிச்சைகள் வழங்கப்படுகிறது என்பது குறித்து, பலருக்கும் சந்தேகங்கள் இருக்கும். மேலும், சிகிச்சைக்கு கட்டணம் நிர்ணயம் செய்யப்படுவதாலும், இந்த சந்தேகங்கள் மக்களிடம் அதிகம் உள்ளது. கொரோனாவிற்கு மருந்தே இல்லையே. மருத்துவர்கள் என்ன சிகிச்சை அளிக்கிறார்கள்?
இதில் பருக்கு ஐயம் இருக்கிறது. இதுகுறித்து, மதுரை அப்போலோ மருத்துவமனையின், நுரையீரல் சிகிச்சை நிபுணர் டாக்டர் நர்த்தனன் மதிசெல்வன் ஒரு விளக்கத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.
கொரோனாவிற்கு மருந்து இல்லை என்று சொல்வது நேரடியாக வைரஸைக் கொல்லும் மருந்துகள் இல்லை என்பதைத் தான் குறிக்கிறது. உதாரணத்திற்கு டி.பி நோய்க்கு, அதற்கே உரிய ஆண்ட்டி பயோட்டிக் மருந்துகள் இருக்கின்றன. அவை நோய்க்கிருமியைக் கொல்கின்றன. அது போல் கொரோனாவுக்கு இல்லை.
அப்படியானால் கொரோனா பாதித்தவர்களுக்கு என்ன சிகிச்சைகள் வழங்கப் படுகின்றன? சளி வெளியேற மருந்துகள், அதீத காய்ச்சல் இருந்தால் அதைக் குறைக்க மருந்துகள், சளி இருந்தால் அது வெளியேற மருந்துகள், நுரையீரலுக்காக பிஸியோதெரப்பி, வாய்வழியாக உணவு உட்கொள்ள முடியவில்லை என்றால் சலைன், க்ளூக்கோஸ் போன்றவையாக இருக்கும். கொரோனா நுரையீரலைப் பாதிப்பதால் ரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவு குறைய தொடங்கும்.
அதற்காக (ஆக்ஸிஜ) பிராணவாயு கொடுக்கப்படும். ரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவு மிகக் குறைந்த அளவுக்குச் சென்றுவிட்டால் வெண்டிலேட்டர் என்ற செயற்கை சுவாசம் கொடுக்க வேண்டும். சிலருக்கு நுரையீரலில் உள்ள ரத்தக் குழாய்களில் ரத்த உறைவு ஏற்பட்டு மரணம் ஏற்படுகிறது. அதனால் ரத்த உறைவைத் தடுக்க ஹெப்பாரின் போன்ற மருந்துகள் பயன்படும்.
வெள்ளை அணுக்களிலிருந்து அதீதமாக வெளியேறும் சைட்டோக்கைன் (Cytokine) என்னும் ரசாயனம் வைரஸைக் கொல்கிறது. ஆனால், சிலருக்கு இது தாறுமாறாகச் சுரந்து ரத்தக் குழாய்களையும், நுரையீரல் செல்களையும் அழிக்கிறது. இதனால் ARDS ( Acute Respiratory Distress Syndrome) எனப்படும் மூச்சுத் திணறல் ஏற்படுகிறது. இதைத் தடுக்க methylprednisolone, Infliximab போன்ற மருந்துகளைச் செலுத்த வேண்டும். ஆண்டிபயாட்டிக் மருந்துகள் சிலருக்குச் சிறுநீரக பாதிப்பை ஏற்படுதக்கூடும் . அவர்களுக்கு டயாலிஸிஸ் சிகிச்சையும், இதயத்தின் சுவர்களில் வைரஸ் பாதிப்பால் இருதயத் துடிப்ம் தாறுமாறாக இருந்தால் அதைச் சரிசெய்யும் சிகிச்சை வழங்கப்படும்.
ரத்தத்தில் சர்க்கரை அளவு, ரத்த அழுத்தம் போன்றவை சீராக இல்லையென்றால் அவற்றைச் சீர் செய்யச் சிகிச்சை. HCQS (Hdroxy chloroquine) போன்று கொரோனாவைக் கொல்வதாகச் சில ஆய்வுகளில் கண்டறியப்பட்ட மருந்துகளைப் பரிட்சார்த்த முறையில் பயன்படுத்துவது. நுரையீரலில் வேறு பாக்டீரியாக்கால் எளிதில் தொற்றிக் கொள்ளும். ஆகவே அதற்கான ஆண்டிபயாட்டிக் மருந்துகளும் பொதுவாக எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வைட்டமின்களும் வழங்கப்படும்.